தென்தமிழகத்தில் மழை... சென்னையில் மேகமூட்டம் - வானிலை மையம்
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீர்த்த நிலையில் தென் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: வங்க கடலில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வட தமிழகம், புதுவையில் வறண்ட வானிலையே காணப்படும்; சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், மழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் தொடங்கியது. ஆரம்பத்தில் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது.
ஓகி புயல் தாக்கத்தினால் நவம்பர் இறுதியில் தென் தமிழகத்தில் மழை கொட்டித்தீர்த்தது. குமரி, நெல்லை மாவட்டத்தில் அணைகள் நிரம்பி வழிகின்றன. அடுத்த உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்திற்கு மழையை தரவில்லை.
இந்த நிலையில் தெற்கு இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வட தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், ஆனால் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 1 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.