மதுவை கொடுத்து மக்களை கெடுப்பதில் அதிமுகவும், திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: ராமதாஸ்
சென்னை: மதுவைக் கொடுத்து, மக்களைக் கெடுக்கும் விஷயத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு திராவிட கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதற்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உரையே சிறந்த உதாரணம் ஆகும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக சட்டப்பேரவையில் இன்று உறுப்பினர்களின் வினாவிற்கு விடையளித்த தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ‘தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது' என்று கூறியிருக்கிறார். அமைச்சரின் இந்நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 35 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். அதன் பயனாக மதுவுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மதுவிலக்கு குறித்து வாய் திறக்க அஞ்சிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட, இப்போது மதுவிலக்கை வலியுறுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மக்களின் உணர்வை மதித்து, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
ஆனால், தமிழக அரசோ, மதுவை விற்று வருவாய் ஈட்டுவதில் காட்டும் ஆர்வத்தை, மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி மக்களை காப்பதில் காட்ட மறுக்கிறது. அதன் விளைவு தான், மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்று சட்டப் பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியிருக்கிறார். தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு எந்த தடையும் இல்லை.
அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டாலோ, அல்லது நாடு முழுவதும் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்தாலோ மட்டும் தான் தமிழ்நாட்டில் மது விலக்கை கொண்டு வர முடியும் என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியிருப்பது கேட்டுக்கேட்டு புளித்துப் போன வாதம் ஆகும். மதுவிலக்கு என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒன்றாகும். இதில், மத்திய அரசு எதையும் செய்ய முடியாது. அதேபோல், அண்டை மாநிலமான கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, அனைத்து குடிப்பகங்களும் மூடப்பட்டிருப்பதுடன், 20% மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்கின்றன. எனவே, பழைய பல்லவியையே அமைச்சர் திருப்பித் திருப்பி பாடக் கூடாது.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விதித்துள்ள இன்னொரு நிபந்தனை அதிர்ச்சியளிக்கிறது. மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால் மதுக்கடைகளை மூடத் தயார் என்று அவர் கூறியிருக்கிறார். மது மூலம் கிடைக்கும் வருமானத்தில் அரசை நடத்த முயல்வது பெரும் அவமானம் ஆகும். அதுமட்டுமின்றி, 1971ம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்து, மதுக்கடைகளை திறக்க அப்போதைய முதலமைச்சர் கலைஞர் என்ன காரணத்தைக் கூறினாரோ, அதையே வேறு வார்த்தைகளில் அமைச்சர் கூறியுள்ளார். மதுவைக் கொடுத்து, மக்களைக் கெடுக்கும் விஷயத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு திராவிட கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் ஆகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.1.90 லட்சம் கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதில், அரசுக்குக் கிடைத்த வரி வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி போக, மீதமுள்ள ரூ.70,000 கோடி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த மது ஆலை அதிபர்களுக்கே சென்றுள்ளது. இவ்வளவு பெரிய வருவாயை இழக்க தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ விரும்பாது. எனவே, இந்த இரு கட்சிகளும் ஒரு போதும் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பது உறுதி.
2016ம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சர் இடும் முதல் கையெழுத்து, மதுவிலக்கு குறித்த ஆணையில் தான் என்று தொடர்ந்து கூறி வருகிறேன். பா.ம.க.வின் வரைவு தேர்தல் அறிக்கையிலும் இதை வலியுறுத்தி உள்ளோம். மதுவிலக்கு விஷயத்தில் திராவிடக் கட்சிகளின் போலி வேடத்தையும், பாட்டாளி மக்கள் கட்சியின் உண்மைத்தன்மையையும் மக்கள் நன்கு அறிவர். எனவே, 2016ம் ஆண்டில் பா.ம.க. ஆட்சிக்கு வருவது உறுதி... புதிய அரசு பதவியேற்ற நாள் முதல் மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்படுவதும் உறுதி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications