லைவ் ரிலே செய்யும் வாட்ஸ் அப் யுவராஜ்... ஒளிபரப்புவது யார்?
நாமக்கல்: தலைமறைவாக இருக்கும் போதும் சரி சரண்டர் ஆன போதும் சரி ஆடியோ, வீடியோ என வாட்ஸ் அப் மூலம் வலம் வருகிறார் யுவராஜ். கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ், கடந்த 100 நாட்களுக்கும் மேலாகவே வாட்ஸ் மூலம் தகவல்களை வெளியிட்டு வந்தார். இப்போது கோர்ட், மருத்துவமனை என யுவராஜ் எங்கு வந்தாலும் அதை வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்புகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
தலித் மாணவர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தலைமறைவான யுவராஜை நீண்ட நாட்களாக வலை வீசி தேடி வந்தது தமிழக போலீஸ். வாட்ஸ் அப் மூலம் போலீசுக்கு சவால் விட்ட யுவராஜை பிடிக்க முடியாமல் திணறியது போலீஸ்.
கோகுல்ராஜ் கொலைவழக்கின் விசாரணை அதிகாரியான திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா கடந்த செப்டம்பர் 18ம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
தற்கொலை என்று போலீஸ் சொல்ல இது மர்ம மரணம் என்று அவரது குடும்பத்தினரும் சொல்லி வருகிறார்கள். கோகுல்ராஜ் கொலைவழக்கில் எஸ்.பி கொடுத்த டார்ச்சர், குடும்பப் பிரச்னை, காதல் விவகாரம் என்று விஷ்ணுப்ரியா இறப்புக்குக் காரணங்கள் அடுக்கப்பட, வழக்கம் போல யுவராஜ், வாட்ஸ் அப் மூலம் வந்து ஐ.ஜி சங்கர், எஸ்.பி செந்தில்குமார், ஏ.டி.எஸ்.பி சந்திரமோகன், டி.எஸ்.பி ராஜு என காவல் துறை உயர் அதிகாரிகள் மீது பகிரங்கமாக குற்றம் சுமத்தினார். யுவராஜை போலீஸாரால் நெருங்கவே முடியாமல் போகவே அக்டோபர் 11ம் தேதி, தானாக முன் வந்து சரணடைவதாக கூறினார்.

சரண்டர் பயணம்
சிபிசிஐடி போலீசில் சரணடைவதற்காக கேரளாவில் தங்கியிருந்த இடத்தில் இருந்து 10ம் தேதி காலை 11 மணிக்குக் கிளம்பிய யுவராஜ், கேரள பதிவு எண் கொண்ட ஜீப்பில் கோவை வந்துள்ளார். பேன்ட், டி-சர்ட், கூலிங்கிளாஸ் போட்டு இருந்ததால் யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை.

கோவை டூ நாமக்கல்
கோவையில் இருந்து நாமக்கல் வருவதற்குள் இரண்டு கார்களில் மாறி வந்துள்ளார். கோவையில் இருந்து வரும் வழியில் இரண்டு இடங்களில் வாகனச் சோதனை நடந்துள்ளது. அப்போதும் காவல் துறையினரால் யுவராஜை அடையாளம் தெரியாமல் விட்டு விட்டார்கள். இரவு ஏழு மணிக்கு நாமக்கல் வந்த யுவராஜ் காரை விட்டுவிட்டு டூவீலருக்கு மாறி இருக்கிறார்.

கண்காணித்த போலீஸ்
நாமக்கல் நகருக்குள் இருசக்கர வாகனத்திற்குள் சுற்றிய யுவராஜை யாராலும் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. கடைசியில் சிபிசிஐடி அலுவலகத்துக்கு பக்கத்திலேயே வந்து ஒரு இடத்தில் தங்கிவிட்டார். 11ம் தேதி காலையில் சி.பி.சி.ஐ.டி அலுவலகம் அமைந்துள்ள சேலம் பைபாஸில் ஒவ்வொரு வாகனத்தையும் தீவிர சோதனை செய்தார்கள். அலுவலகத்தைச் சுற்றியுள்ள அனைத்துச் சாலைகளும் காவல் துறை கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டன.

சிபிசிஐடி அலுவலகத்தில் யுவராஜ்
சேலம்- மதுரை பைபாஸ் சாலையில் உள்ள முதலைப்பட்டியில் சோதனை சாவடி அமைத்து அனைத்து வாகனங்களையும் கண்காணித்தனர். சேலம் ரோடு, திருச்செங்கோடு ரோடு ஆகியவற்றிலும் வாகன சேதனை நடத்தினர். சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு வருபவர்களை போலீஸார் எக்ஸ்ரே கண்களுடன் கண்காணித்து வந்தனர். இந்தப் பணியில் சுமார் 800க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர். யுவராஜ் ஆதரவாளர்கள் சங்ககிரி, மல்லூர் ஆகிய பகுதிகளிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். அதையும் மீறி எப்படியோ நூற்றுக்கணக்கான பேர் சிபிசிஐடி அலுவலகம் முன்பு திரண்டனர். சொன்னது போலவே காலை 10.30 மணிக்கு அத்தனை போலீஸையும் மீறி சிபிசிஐடி அலுவலகத்திற்குள் வந்து சரணடைந்தார்.

தண்டனை வாங்கித்தருவேன்
கறுப்புகலர் டி-சர்ட் போட்டு... கைலி கட்டிக்கொண்டு, தோளில் துண்டு, தலையில் தொப்பி அணிந்தபடி சர்வசாதாரணமாக நடந்தே சிபிசிஐடி அலுவலகத்துக்கு வந்தார் யுவராஜ். யாருக்குமே யுவராஜை அடையாளம் தெரியவில்லை. டி சர்டையும், தொப்பியையும் கழற்றிய பின்னரே அனைவருக்கும் அடையாளம் தெரிந்துள்ளது. "இந்த வழக்கு சட்டவிரோதமான பொய்வழக்கு என்பதை நிரூபிப்பேன். இந்த வழக்கில் தவறு செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் தண்டனை வாங்கிக் கொடுப்பேன். விஷ்ணுப்ரியா மரணத்துக்கு காரணமான எல்லா அதிகாரிகளும் தண்டிக்கப் படுவார்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று கத்தினார் யுவராஜ். அங்கு வந்த போலீஸ் அப்படியோ அள்ளிக்கொண்டு போனது.

வாட்ஸ் அப்பில் வருவேன்
நான் சிறைக்குப் போனாலும் வாட்ஸ் அப் மூலம் வலம் வருவேன் என்று கூறியிருந்தார் யுவராஜ். சொன்னது மாதிரியே சிபிசிஐடி அலுவலகத்தில் தரையில் அமர்ந்த காட்சி சில நிமிடங்களில் வாட்ஸ் அப் மூலம் வலம் வந்தது. ஊடகங்களிலும் வெளியானது. அதேபோல நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜரான காட்சியும் வீடியோவாக வலம் வருகிறது. இதுவரைக்கும் இப்படி எந்த குற்றவாளியின் வீடியோவும் வலம் வந்ததில்லை. ஆனால் யுவராஜை போட்டோ, வீடியோ எடுத்து, லைவ் ஆக ஒளிபரப்புவது யார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
அடைக்கலம் கொடுத்தது யார்?
தலைமறைவு காலத்தில் வாட்ஸ் அப் மூலம் அதிக அளவு பப்ளிசிட்டி தேடிக்கொண்டார் யுவராஜ். தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் யுவராஜ் பல்வேறு தவறுகளைச் செய்துள்ளார். அதுவும் இப்போது அவருக்கு மட்டுமல்லாமல் அவருக்கு உதவியவர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது. யுவராஜுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications