தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் நாளை 2வது கட்ட தேர்தல்.. விறு விறு ஏற்பாடுகள்!
லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 95 தொகுதிகளில் நாளை நாடு முழுக்க நடைபெறுகிறது.
சென்னை: லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 95 தொகுதிகளில் நாளை நாடு முழுக்க நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11ம் தேதி நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் மொத்தம் 91 தொகுதிகளில் நடந்தது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. நாளை மொத்தம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 95 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது.
அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, திரிபுரா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடக்கிறது.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நாளை 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது. மிக முக்கியமான மாநிலங்களான உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 3 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. அதேபோல் கர்நாடகாவில் மொத்தம் 14 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. பெங்களூரில் உள்ள நான்கு முக்கிய தொகுதிகளிலும் தேர்தல் நடக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதில் அதிக இடங்களில் தேர்தல் நடக்கும் மாநிலம் தமிழகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடப்பதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல் சட்டசபை இடைத்தேர்தலும் நடப்பது கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
இந்த லோக்சபா தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. மாலை 6 மணி வரை லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. மதுரையில் மட்டும் சித்திரை திருவிழா காரணமாக இரவு 8மணி வரை லோக்சபா தேர்தல் நடக்க இருக்கிறது.
இந்த தேர்தல் காரணமாக நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. நேற்று வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் 38 தொகுதியில் மட்டுமே தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 23 செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.