லண்டன் மற்றும் கொழும்பு விமானங்களில் எஞ்சின் கோளாறு- அவதியடைந்த 300 பயணிகள்
சென்னை: எஞ்சின் கோளாறால் லண்டன் மற்றும் கொழும்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து 300 பயணிகள் அவதிக்குள்ளாகினார்கள்.
சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.

அதில் 234 பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். அப்போது எஞ்சினை இயக்கிய போது அதில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டு பிடித்தார்.
உடனே விமான நிலையத்தில் இருந்த எஞ்சினியர்கள் வரவழைக்கப்பட்டு கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆகியும் சரி செய்ய முடியவில்லை. இதனால் விமானம் ரத்து செய்யப்பட்டது. அதில் இருந்த 234 பயணிகளையும் விமானத்தில் இருந்து இறக்கி அருகில் இருந்த ஹோட்டலில் தங்க வைத்தனர்.
இதே போல் சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்றிரவு 9.25 மணிக்கு புறப்பட தாயராக இருந்தது.
இதில் 90 பயணிகள் அமர்ந்திருந்தனர். அப்போது விமானத்தை இயக்கும் போது கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் கீழே இறக்கி விமான நிலையத்தில் அமர வைத்தனர்.
பின்னர் இன்று அதிகாலை விமானம் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து அதிகாலை 5.10 மணிக்கு விமானம் கொழும்பு புறப்பட்டுச் சென்றது.
2 விமானங்களில் இருந்து 300 பயணிகள் விமான நிலையத்தில் கடும் அவதிப்பட்டனர்.












Click it and Unblock the Notifications