ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கலக்கும் எம்.ஜி.ஆர்- நட்சத்திரங்களும் களமிறங்கியதால் கலர்ஃபுல்
திருச்சி: இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, பல கட்சி முக்கிய பிரமுகர்களும் முகாமிட்டுள்ளதால், ஸ்ரீரங்கம் விழாக் கோலம் பூண்டுள்ளது.
அதிமுக, திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய நடிகர்கள், நடிகையர்கள் களமிளங்கியுள்ளதால் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் களைகட்டியுள்ளது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வரும், 13ஆம் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது.
அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து, அமைச்சர்கள், மேயர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என, ஒட்டுமொத்த அ.தி.மு.க.,வினரும், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஸ்ரீரங்கம் தொகுதியில், தங்கியிருந்து, தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க., வேட்பாளர் ஆனந்த், திருச்சி தெற்கு மாவட்ட செயலர் நேருவுடன் கிராமம், கிராமமாக சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், ஒன்றிய, நகர செயலர்கள் என, தி.மு.க., படையும் ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டு உள்ளது.

அம்மா வரலையே
ஸ்ரீரங்கம் தொகுதி ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி. ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு ஜெயலலிதாவினால் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே அதிமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

களமிறங்கிய எம்.ஜி.ஆர்
இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக புதிய யுக்தியை கையாண்டு வாக்காளர்களை கவர்ந்து வருகிறது. பிரச்சாரத்திற்கு சுவாரஸ்யம் சேர்க்க, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். போன்ற ஒருமித்த தோற்றம் கொண்ட பலர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வாக்கு சேகரிப்பு
கருப்புக் கண்ணாடி, தொப்பி, பெரிய கைக் கடிகாரம் என மேக்-அப் போட்டு வாக்காளர்களிடம் ஓட்டு சேகரிக்கிறார் எம்.ஜி.ஆர். இவர்கள், எம்.ஜி.ஆர். கையசைப்பது போலவே வாக்காளர்களைப் பார்த்து கையசைத்து அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்கின்றனர். சிலர், எம்.ஜி.ஆர். குரலில் பேசவும், அவரது திரைப்படங்களில் இருந்து பிரபல பாடல்களைப் பாடியும் கவனத்தை ஈர்க்கின்றனர்.

மறையாத புகழ்
எம்.ஜி.ஆர் மறைந்து இருபது ஆண்டுகள் கடந்துவிட்டாலும் பொதுமக்கள் மத்தியில் அவருக்கு உள்ள மதிப்பு சற்றும் குறையவில்லை. எனவே, இதுபோன்ற பிரச்சாரங்கள் எங்களுக்கு நிச்சயம் வாக்குகளைப் பெற்றுத் தரும் என நம்புகின்றனர் அதிமுகவினர்.

நட்சத்திர பேச்சாளர்கள்
நட்சத்திர பேச்சாளர்கள் என ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் பிரசாரத்திற்கு வராததால் வழக்கமான பொதுத்தேர்தலை போல நடிகர், நடிகைகளை களம் இறக்க அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் முடிவு செய்துள்ளது.

நடிகர், நடிகையர்கள்
அதன்படி அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து நடிகர்கள் ராமராஜன், ஆனந்தராஜ், குண்டு கல்யாணம், வையாபுரி, சிங்கமுத்து, தியாகு ஆகியோரும், நடிககைள் சி.ஆர்.சரஸ்வதி, பாத்திமா பாபு, நிர்மலா, குயிலி ஆகியோரும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.
இதில் முதல் கட்டமாக நடிகர்கள் குண்டு கல்யாணம், தியாகு ஆகியோர் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு நேற்று மாலை பிரசாரத்தை தொடங்கினர்.

சரத்குமார் பிரச்சாரம்
வருகிற 9ஆம்தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

திமுகவில் நடிகர்கள்
இதேபோல் தி.மு.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து நடிகர்கள் வாசு விக்ரம் வருகிற 5ஆம்தேதியும், குமரிமுத்து 6ஆம்தேதியும் மணிகண்டம், அந்தநல்லூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை ஒன்றியங்களில் கிராமம் கிராமங்களாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள். மேலும் நடிகர் வாகை சந்திரசேகர் உட்பட தி.மு.க. ஆதரவு நடிகர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். நடிகர், நடிகைகளின் பிரசாரத்தால் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் வண்ணமயத்தோடு களை கட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications