Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாபெரும் வெற்றியை பெற்ற முருகன் பக்தர்கள் மாநாடு.. தமிழ்நாட்டில் சனாதன எழுச்சி?

Subscribe to Oneindia Tamil

மதுரை: இந்து முன்னணி சார்பாக மதுரையில் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள் மாநாடு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடக்க 12 மாதங்கள் கூட இல்லாத நிலையில் இந்த மாநாடு தமிழ்நாடு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

முருகன் பக்தர்கள் மாநாடு எப்படி மாபெரும் வெற்றியை பெற்றது.. தமிழக அரசியலில் இது என்ன மாதிரியான அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்று இங்கே பார்க்கலாம்!

bjp Murugan

மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட முருகன் பக்தர்கள் மாநாடு

ஜூன் 22, 2025 அன்று, இந்து முன்னணி சார்பில் மதுரையில் "முருகன் பக்தர்கள் மாநாடு" என்ற ஒரு பெரிய ஆன்மீக நிகழ்வு நடந்தேறியது. இந்த மாநாட்டில், தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர். ஆறு முக்கியமான முருகன் கோயில்களின் மாதிரி வடிவங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டன, மேலும் நாள் முழுவதும் வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் பக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன. மொத்த மாநாட்டு அரங்கும் பக்தி பரவசமாகி காணப்பட்டது.

மாநாட்டில் பாஜக தலைவர்கள் பங்கேற்பு

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த மாநாடு முற்றிலும் ஆன்மீக நோக்கங்களுக்காக மட்டுமே நடந்தது என்றும், இதற்கு எந்தவிதமான அரசியல் நோக்கமும் இல்லை என்றும் பாஜக தலைவர்கள் தெரிவித்திருந்தனர். அதன்படியே இந்த மாநாட்டில் பொதுமக்கள் பலரும் கூடி.. சனாதனத்தை போற்றும் விதமாக மாநாட்டிற்கு பெரும் ஆதரவு தெரிவித்தனர்.

நயினார் நாகேந்திரன் இந்த மாநாட்டில் சிறப்பு ஆடியோ பக்தி ஆல்பத்தை வெளியிட்டார். முருக பக்தர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து மத விழிப்புணர்வை ஏற்படுத்துவதே மாநாட்டின் முக்கிய நோக்கம் என்று அவர் கூறினார். அண்ணாமலை பேசுகையில்,அரசியல்வாதிகள் இந்து மக்களிடையே ஒற்றுமை இல்லை என்று கூறி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். வட தமிழ்நாட்டில், பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் ருத்ராட்சம் அணிந்து செல்வது கூட கேள்விக்குறியாகியுள்ளது. நம்முடைய வாழ்வியல் முறைகள் பாதிக்கப்படும்போது, நாமும் கேள்வி எழுப்ப வேண்டும் என்றார்.

அதேபோல் இந்த மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சியும் தமிழ்நாடு முழுக்க கவனம் பெற்றது. திக மற்றும் திமுகவினரால், நாஸ்திக கருத்து அதிகம் பேசப்பட்ட தமிழ்நாட்டில், ஆன்மிகத்தின் எழுச்சியை உணர்த்தும் விதமாக இந்த வீடியோ அமைந்து இருந்தது.

சனாதன தர்மத்தில் திளைத்த தமிழ்நாடு!

தமிழகத்தின் நிலம் சனாதன தர்மத்தில் ஊறி திளைத்தது என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த மாநாடு அமைந்தது. நம் மண்ணில் உயர்ந்து நிற்கும் பழங்கால கோயில்கள், சனாதன சடங்குகள், உள்ளூர் மரபுகள், ஆன்மீக வாழ்க்கை முறை இந்த மண்ணில் சனாதனம் ஆழமாக வேரூன்றி இருப்பதை தெளிவாகக் காட்டுகின்றன. திராவிட அரசியல் இங்கே கால் வைக்கும் முன்பே.. சனாதன நம்பிக்கை என்பது தமிழரின் அடையாளத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது என்பதை இந்த மாநாடு மக்களுக்கு நினைவூட்டியது. பெருந்திரளாக 5 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதே இதற்கு மிகப்பெரிய உதாரணம்!

பாரத தேசமெங்கும் பரவிய முருக வழிபாடு!

முருகன், தமிழர்களால் ஒரு சகோதரனாக, மகனாக மற்றும் வீரனாக போற்றப்படுகிறார். தமிழ்க்கடவுள் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். தமிழர்களின் முருக வழிபாடு என்பது உலகறிந்தது. ஆனால் அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல. அவர் இலங்கை, கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவில் கூட "கார்த்திகேயா" "சுப்ரமணியம்" என்ற பல பெயரில் வழிபடப்படுகிறார்.

தமிழ் இலக்கியங்கள், தமிழ் பாடல்கள் கூட "அழகென்று சொல்லுக்கு முருகா" என்று தொடங்கி பல வழிகளில் முருகனை புகழ்ந்து வழிபட்டு வருகிறது. அப்படிப்பட்ட முருகனை தமிழகத்தின் பெரிய அமைப்புகள் எதுவும் கண்டுகொள்ளாத நிலையில், மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகள்தான் இணைந்து முருகன் பக்தர்கள் மாநாடு மூலம் போற்றியது. மக்கள் திரளாக வந்து இந்த நிகழ்விற்கு ஆதரவளிக்கவும் அதுவே காரணம்.

தமிழ் கலாச்சாரத்தின் இதயத்தில் வாழும் முருகப்பெருமான்.. பரந்து விரிந்த பாரத பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார் என்பதை இந்த மாநாடு காட்டியது. பலகோடி பக்தர்களின் ஆன்மீகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த மாநாடு அமைந்தது.

திமுகவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை

ஆளும் திமுக பகுத்தறிவு சிந்தனை என்ற பெயரில், பாரம்பரிய இந்து பழக்கங்களை வலுவிழக்கச் செய்ய முயற்சிக்கிறது. அவர்கள் நாத்திகத்தை ஊக்குவித்து, மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளனர் என்ற கடுமையான விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. உதாரணமாக சமீபத்தில் சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது.

உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரின் இதுபோன்ற கருத்துக்களுக்கு பதிலடி தரும் விதமாக மதுரையில் நடந்த முருகன் பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. திமுகவின் நாத்திக அரசியலுக்கு .. இந்த முருகன் மாநாடு ஒரு வலுவான எதிர்வினையாக அமைந்தது. தமிழ்நாட்டு மக்களின் உண்மையான ஆன்மீக வேர்களை, அவர்களின் வழிபாட்டு உரிமைகளை, மற்றும் அவர்கள் பல நூற்றாண்டுகளாக வழிபட்டு வந்த கடவுள்களை அவர்களுக்கு இந்த மாநாடு நினைவுபடுத்தியது.

தென் தமிழ்நாட்டில் கிடைத்த பெரிய வரவேற்பு

குறிப்பாக தென் தமிழகத்தில் இந்த மாநாட்டிற்கு பெரும் ஆதரவு கிடைத்தது. அழகரும்.. மீனாட்சியும் வாழும் மதுரை மண்ணில்.. முருகன் அந்த நாள் கொண்டாடப்பட்டார். திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொல்லி சமீபத்தில் பரவிய கருத்துக்களுக்கு எதிராக இந்த கூட்டம் கூடியதாகவே பார்க்கப்படுகிறது. திமுக எம்.பி. ஒருவரின் செயல்பாடுதான் இந்துக்களை இப்படி ஒன்றுகூட வைத்ததாக பார்க்கப்படுகிறது.

தென்தமிழ்நாட்டில் இந்த மாநாடு பெற்ற மாபெரும் வெற்றியே இதற்கு உதாரணம். பழனி, திருச்செந்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த மாநாட்டிற்கு வந்திருந்தனர். இதை தங்களின் குடும்ப விழாவாக நினைத்து பெருந்திரளாக கொண்டாடினர். இதற்காக ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கிராமங்களில் இருந்து கூட ஏராளமான மக்கள் "முருகா முருகா" என்று கோஷமிட்டபடி வந்தனர். பலருக்கு இது அரசியல் மட்டுமல்ல அல்ல.. முருகனுக்கான அன்பும் கூட!

திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சர்ச்சை கருத்துக்கள் திமுக தரப்பிலிருந்து வந்தபோது கூட பெருந்திரளாக கூடி போராடியவர்களில் பல பக்தர்கள் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான். அந்த திடீர் ஒன்றிணைந்த கூட்டத்தை அரசே எதிர்பார்க்கவில்லை.

இந்த மாநாடு ஆன்மீக பெருமையையும் பக்தியையும் தமிழ்நாட்டில் தூண்டி உள்ளது. எதிர்க்கட்சிகள் இதை ஒரு அரசியல் நடவடிக்கையாகப் பார்த்தாலும், பல தமிழர்களுக்கு இது ஒரு வாழ்வியல் கொண்டாட்டம்! தங்கள் தர்மத்தின் அடையாளம்!

எதிர்க்கட்சிகளின் கண்டனம்

இருப்பினும், திமுக, சிபிஎம், மற்றும் மதிமுக போன்ற எதிர்க்கட்சிகள் இந்த நிகழ்வை கடுமையாக விமர்சித்தன. வரவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக பாஜக இந்த மாநாட்டை நடத்துவதன் மூலம் அரசியலை மதத்துடன் கலக்க முயற்சிப்பதாக அவை குற்றம் சாட்டின.

பாஜகவின் மறுப்பு

பாஜக இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, இந்த கூட்டம் அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படவில்லை என்று திட்டவட்டமாக கூறியது. அனைத்து காவல்துறை மற்றும் நீதிமன்ற விதிகளையும் பின்பற்றியதாகவும், பக்தர்கள் மத காரணங்களுக்காக மட்டுமே வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதிமுகவின் ஆர்.பி. உதயகுமார் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அழைக்கப்பட்டதால் வந்ததாகவும், எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தொடரும் அரசியல் விவாதம்

முருகன் பக்தர்கள் மாநாடு தற்போது தமிழக அரசியலில் ஒரு முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது. சிலர் இது மக்களிடையே பெருகி வரும் பக்தியின் அடையாளமாக பார்க்கிறார்கள், இன்னும் சிலர் 2026 தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தின் மத மற்றும் அரசியல் வெளியில் மதம் ஒரு முக்கிய பங்கெடுக்கப்போகிறது என்று கருதுகின்றனர். பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+