போக்குவரத்து துறையில் லஞ்சம்: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் போர்க்கொடி
சென்னை: லாரி உரிமையாளர்களிடம் லஞ்சம் பெறும் போக்குவரத்து துறையை கண்டித்தும், போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனே நீக்கக் கோரியும் லாரி உரிமையாளர்கள் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்ல தீர்மானித்துள்ளனர்.
போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் அவர்கள் செந்தில் பாலாஜியின் வீடு முன்பு போராட்டமும் நடத்தினர்.

இந்நிலையில் இது குறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில்,
லாரிகளில் அளவுக்கு அதிகமாக பளு ஏற்றுவது நிறுத்தப்பட வேண்டும். அரசு சார்பில் லாரிகளில் அதிக பளு ஏற்ற தூண்டுகிறார்கள். பின்னர் அளவுக்கு அதிகமாக பளு ஏற்றப்பட்டுள்ளது என்று கூறி லாரிகளை மடக்கி பணம் வசூலிக்கிறார்கள். லாரி ஒன்றுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வசூல் செய்கிறார்கள். அந்த பணத்தை அளித்தால் லாரிகளில் எவ்வளவு பாரம் ஏற்றிக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் என்கிறார்கள்.
சாலை விபத்துகளை தடுக்கும் விதத்தில் வாகனங்களில் அதிக பளு ஏற்றக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி அதிக பளு ஏற்றுவதற்கு எதிரான சட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஆனால் அரசு அதிகாரிகளே அந்த சட்டத்தை மீறுகிறார்கள்.
அதிக பளு ஏற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் லாரிகளை மடக்கி லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தியும், எங்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாத அமைச்சர் செந்தில் பாலாஜியை மாற்ற வலியுறுத்தியும் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்ல உள்ளோம் என்றனர்.












Click it and Unblock the Notifications