பாணாவரம் அருகே சோகம்.. வீட்டை விட்டு ஓடிபோய் திருமணம் செய்ய முயன்ற காதலர்கள் விபத்தில் பலி
பாலத்தின் மீது பைக் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Recommended Video

சோளிங்கர்: வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்து பைக்கில் சென்ற காதல்ஜோடி விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
நெமிலி அருகே உள்ள வடகண்டிகை பகுதியை சேர்ந்தவர் சரத்குமார். அரசு கலைக்கல்லூரில் 3-ம் ஆண்டு படித்து வந்த இவருக்கு வயது 20. சரத்குமாருடன் ஜெயப்பிரதா என்பவர் படித்து வருகிறார். ஒரே வகுப்பில் உள்ள இருவரும் ஒருவரையொருவர் மிக தீவிரமாக விரும்பி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் வேறு வேறு சமூகத்தினர். இதனால் ஜெயப்பிரதா வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.

பெற்றோர்கள் எப்படியோ தங்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக இல்லை, அதனால் வீட்டை விட்டு வெளியேறி தாங்களே திருமணம் செய்து கொள்ளலாம் என்று சரத்குமாரும், ஜெயப்பிரதாவும் முடிவு செய்தனர். சோளிங்கரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டனர். அதற்காக நேற்றிரவு சரத்குமார், ஜெயப்பிரதாவை அவரது வீட்டிலிருந்து தனது பைக்கில் ஏற்றி சோளிங்கருக்கு சென்று கொண்டிருந்தார்.
பாணாவரம் அடுத்த மங்கலம் என்ற இடத்தில் சென்றபோது பைக் திடீரென நிலைதடுமாறி அங்கிருந்த பாலத்தின் தடுப்பு சுவர் மீது பலமாக மோதியது. இதில் இரண்டு பேருமே தூக்கி வீசப்பட்டு அருகிலிருந்த பள்ளத்தில் போய் விழுந்தனர். பலமாக காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து பாணாவரம் போலீசார் விரைந்து வந்து உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications