அக்கா-தம்பி உறவுமுறைக்குள் காதல்... சென்னை கமிஷனர் ஆபிஸ் முன்பு காதலர்கள் மீது தாக்குதல்!
சென்னை: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சரணடைய வந்த காதலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேரை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி ஜெனிபர் (26). ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ள ஜெனிபர், அடுத்தகட்ட தேர்வுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில், ஜெனிபருக்கும் ராயபுரத்தைச் சேர்ந்த சாமுவேல் (24) என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களான இருவரும் ரகசிய திருமணமும் செய்து கொண்டனர். கடந்த வாரம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஜெனிபரின் பெற்றோர் தங்கள் மகள் கடத்தப்பட்டுவிட்டதாக சென்னை நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்தச் சூழ்நிலையில் நேற்று பகல் 11 மணியளவில் ஜெனிபரும், சாமுவேலும் பாதுகாப்புக் கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். இது குறித்து முன்னரே தகவல் அறிந்த ஜெனிபரின் உறவினர்கள் கமிஷனர் அலுவலக வாசலிலேயே காத்திருந்தனர்.
பின்னர், அவர்கள் ஜெனிபர் மீதும், சாமுவேல் மீதும் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில், காயமடைந்த சாமுவேல், கமிஷனர் அலுவலகத்துக்குள் தப்பி ஓடினார். பின்னர் ஜெனிபரை ஒரு ஆட்டோவில் ஏற்றி அக்கும்பல் கடத்திச் செல்ல முற்பட்டது. விரைந்து வந்த போலீசார் ஜெனிபரைக் காப்பாற்றினார்கள்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் வேப்பேரி உதவி கமிஷனர் அய்யப்பன், இன்பெக்டர் பிரபு ஆகியோர் போலீஸ் படையுடன் விரைந்து வந்தனர். பின்னர் சாமுவேல், ஜெனிபர் மற்றும் அவரது உறவினர்கள் வேப்பேரி போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு போலீசாரிடம் ஜெனிபரின் உறவினர்கள் கூறுகையில், "ஜெனிபர், சாமுவேலைவிட வயதில் மூத்தவர். இருவரும் அக்கா-தம்பி உறவுமுறை கொண்டவர்கள். எனவேதான் இந்த காதலையும், அவர்களின் திருமணத்தையும் எதிர்க்கிறோம்" என்றனர்.
ஆனால், ஜெனிபரும், சாமுவேலும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர். இதனால் வேப்பேரி போலீசார் ஜெனிபரையும், சாமுவேலையும் பாதுகாப்பாடு நொளம்பூர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரச்சினையை தீர்த்துக்கொள்ளும்படி ஜெனிபரின் உறவினர்களும் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
சினிமாவில் வருவது போன்ற இந்த அடிதடி சம்பவத்தால் போலீஸ் கமிஷனர் அலுவலகம் நேற்று பகல் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.