ஆஹா.. இதுவல்லவோ தாய்மையின் உன்னதம்.. கோத்தகிரியில் ஒரு நெகிழ்ச்சி!
தாய்க்கரடி ஒன்று தன் குட்டியை மீட்க பாசப்போராட்டத்தில் ஈடுபட்டது.
Recommended Video

கோத்தகிரி: என்னதான் விஞ்ஞான வளர்ச்சி அடைந்து உலகம் தற்போது நவநாகரீகத்தின் உச்சியில் இருந்தாலும் எப்போதுமே புதியதாக தெரியது தாய்மை மட்டும்தான்!
அது எந்த உயிர்கள் ஆனாலும், தாய்மை ஸ்தானத்தை அடைந்துவிட்டாலே அன்பு என்னும் உன்னதமும் கூடவே ஒட்டிக் கொள்கிறது. அந்த வகையில் ஒரு கரடியின் பாச போராட்டம்தான் இந்த சம்பவம்.
பொதுவாக நீலகிரியில் கரடிகள் அதிகம். அதுவும் கோத்தகிரி பகுதியில் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகம். ஆனால் அந்த பகுதிகளில் நிறைய வீடுகள் பக்கத்து பக்கத்திலேயே கட்டி மக்கள் குடிவந்துவிட்டனர். இதனால் கரடிகள் சில சமயங்களில் இந்த குடியிருப்பு பகுதிகளுக்கே வந்துவிடுவதுண்டு. அப்படித்தான் இன்று காலையும் ரைஃபில் ரேஞ்ச் என்ற இடத்தில் குட்டிகளுடன் இரண்டு கரடிகள் வந்தன.

தலையை உள்ளே விட்டது
சாலைகளில் வந்துகொண்டிருந்த இந்த கரடிகள் அங்கிருந்த சிலம்பரசன் என்பவரது வீட்டின் பிக்கம் வந்தன. அந்த வீட்டின் வாசலில் பீன்ஸ் காய்கள் சிதறி கிடந்தன. அதனை எல்லா கரடிகளும் சாப்பிட்டன. பிறகு அங்கு ஒரு இரும்பு கேட் இருந்தது. பெரிய கரடிகள் புத்திசாலித்தனமாக அந்த இரும்பு கேட்டை தாண்டி குதித்து வெளியே வந்து நடந்து சென்றன. ஆனால் ஒரு குட்டிக் கரடிக்கு கேட்டை தாண்டி குதிக்க முடியவில்லை.அதனால் கேட்டின் கம்பிகள் வழியாக சென்றுவிடலாம் என்று தலையை உள்ளே விட்டது.

தாயும்-சேயும் அழுகை
ஆனால் கம்பிகள் சிறியன என்பதால் கரடியால் குதிக்க முடியவில்லை. ஆனால் அதன் தலை மட்டும் கம்பிகளுக்குள் மாட்டிக் கொண்டது. அதனால் குட்டிக்கு வலி தாங்க முடியவில்லை. சத்தம் போட்டு கத்தியது. குட்டியின் அலறல் கேட்டதால் முன்னே சென்று கொண்டிருந்த தாய் கரடி திரும்ப ஓடிவந்தது. குட்டி அழுவதை பார்த்து தாய்க்கரடி இன்னும் சத்தமாக அழுதது. தன் குட்டியை எப்படி வெளியே எடுப்பது என தெரியாமல் விழித்து... தவித்தது.. சாலையில் சென்றோர், குடியிருப்புவாசிகள் எல்லோரும் இந்த கரடிகளின் சத்தத்தை கேட்டு ஓடிவந்துவிட்டார்கள்.

மனசே இல்லை
பிறகு தாய்க்கரடியின் பாசப் போராட்டத்தை கண்ட மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். குட்டியை காப்பாற்ற முதலில், அங்கிருந்த மற்ற கரடிகளையெல்லாம் விரட்டியடித்தனர். எல்லா கரடிகளும் ஆட்களை கண்டதும் ஓடிவிட்டன. ஆனால் தாய்க்கரடியால் மட்டும் அங்கிருந்து செல்ல மனசே வரவில்லை.

கவனித்தபடியே இருந்தது
கொஞ்சதூரம் சென்று அங்கிருந்த ஒரு புதரில் மறைந்து கொண்டது. தீயணைப்பு வீரர்கள் தன் குட்டியை காப்பாற்றுகிறார்களா இல்லையா என்பதை மறைந்தபடி பார்த்து கொண்டே இருந்தது. இதனையும் மக்கள் கவனித்து கொண்டுதான் இருந்தார்கள். கடைசியில் ஆக்ஸா பிளேடு வைத்து இரும்பு கேட்டின் கம்பியை அறுத்து கரடி குட்டியை மீட்டனர்.

எல்லாமே தாய்மைதான்
தாய்க்கரடி தூரமாக, ஓரமாக மறைந்து கொண்டிருப்பது அந்த குட்டிக்கு தெரியாது. ஆனாலும் பாருங்கள், மீட்கப்பட்ட உடனேயே துள்ளி குதித்து புதரில் மறைந்திருந்த தன் அம்மாவிடம் போய் ஒட்டிக் கொண்டது. பின்னர் குட்டியை தன்னுடன் கூட்டிக்கொண்டுதான் அந்த தாய்க்கரடி அங்கிருந்து நகர தொடங்கியது!! அன்பு.. அரவணைப்பு.. ஒன்று சேர்ந்த கலவைதான் தாய்மை. தாய்மை என்று வந்துவிட்டால் மனிதன் என்ன விலங்கு என்ன?












Click it and Unblock the Notifications