வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்திலன் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்தது. திருச்சி, வேலூர் போன்ற மாவட்டங்களில் இது 107 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவை தொட்டது.
இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்க உள்ளது. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த பிறகு என்னபாடுபடுவமோ என்று மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் வருண பகவான் கருணை காட்டிவிட்டார்.
வங்கக்கடலில் குறைந்த காற்றவுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால், தமிழகத்தில் சென்னை உட்பட பல பகுதிகளில் இன்று மழை பெய்துள்ளது.
கன்னியாகுமரி, நாகர்கோவில், குழித்துறை, மார்த்தாண்டம், திருவட்டாறு உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும், கோவில்பட்டி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, சித்தன்னவாசல், அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தென்மாவட்டங்களில் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையும், ஒரு சில இடங்களில் கன மழையும் மழை பெய்யக்கூடும் எனவும், வட தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.