நகராமல் நிற்கும் தாழ்வு நிலை.. விடிய விடிய வெளுத்துக் கட்டிய மழை... பயத்தில் நடுங்கும் சென்னை!
சென்னை: சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதி மக்கள் மீண்டும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். மீண்டும் கன மழை பெய்து வருவதால் மறுபடியும் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்படுமோ என்ற அச்சமே அது. நேற்று இரவு விடிய விடிய பல பகுதிகளில் பலத்த மழை பெய்து மக்களை மேலும் அச்சத்தில் மூழ்கடித்த்து.
இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால், சென்னை உட்பட வடமாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும், கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான இடங்களில் மழை பெய்தது. சென்னையில் காலை 11 மணி வரை வெயில் தலை காட்டினாலும், அதன் பின்னர் நகரில் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்தது.

இரவு 8 மணியளவில் எ்ழும்பூர், சிந்தாதிரிபேட்டை, புரசைவாக்கம், மூலக்கடை, பெரம்பூர், கொளத்தூர், மாதவரம், புழல் உட்பட நகரின் பெரும்பான்மையான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையுடன் காற்றும் பலமாக வீசியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. மாலை முதல் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. ஏற்கனவே சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் நேற்று பெய்த மழையால் மேலும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், அனாகாபுத்தூர் பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. அம்பத்தூர், பூந்தமல்லி, குன்றத்தூர், மாங்காடு, திருவேற்காடு, ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயல், கோவில்பதாகை உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்தது. இதேபோல் சென்னை புறநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது.
இதேபோல முகப்பேர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.












Click it and Unblock the Notifications