நெருங்குகிறது புயல் சி்ன்னம்...சென்னையிலிருந்து 550 கி.மீ தொலைவில் நிற்கிறது!
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்ழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது சென்னையலிருந்து 550 கிலோமீட்டர் தொலைவிலும், நாகையிலிருந்து 570 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இது ஒரு ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக உருமாறி, 16ம் தேதி மாலையில், நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றழுத்த மண்டலம், தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக கடலில் 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் தற்போது கடலுக்குள் போகவில்லை என்று தெரிகிறது.
சென்னை, நாகப்பட்டினம், கடலூர் துறைமுகங்களில் புதுச்சேரி, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களிலும் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நாளை மாலை முதல் சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம் கரையைக் கடக்கும் சமயத்தில், வடக்குக் கடலோரத் தமிழகத்திலும், புதுச்சேரியிலும், சேதம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பரவலாக மழை
தமிழகத்தில் இன்று பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் அதிகபட்சமாக 7 செமீ மழையும், பாபநாசத்தில் 5, பூதப்பாண்டி, செங்கோட்டையில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
16ம் தேதி காலை வரைக்குமான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்திலும், புதுவையிலும் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
16ம் தேதி முதல் 17 வரை மிக கன மழை
16ம் தேதி முதல் 17ம் தேதி வரை தமிழகத்தின் வடக்குக் கடலோரம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யலாம்.
16ம் தேதி முதல் 17ம் தேதி வரை தெற்கு தமிழகத்தில் சில இடங்களில் மழை அல்லது கன மழை பெய்யக் கூடும்.
சென்னையில்
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும். தரைக்காற்று பலமாக இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். மழை அல்லது இடியுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்யலாம். தரைக்காற்று பலமாக இருக்கும்.