காற்றழுத்தம் தீவிரமடைகிறது: நாகை, சென்னை இடையே கரையைக் கடக்கும் - 15 முதல் கன மழை
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது தற்போது வலுவடைந்து வருவதாகவும், இது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி, சென்னை - நாகை இடையே கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடலோரத் தமிழகத்தில் நவம்பர் 15ம் தேதி முதல் 16ம் தேதி வரை கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று கூறுகையில்,
நேற்று தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்கு தென் கிழக்கே 650 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
கடும் கொந்தளிப்புடன் கடல்
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கும், நாகைக்கும் இடையே கரையை கடக்கும்.
இதன் காரணமாக 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு முதல் 16-ந்தேதி வரை கன மழை பெய்யும். காற்றும் 60 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்தில் வீசும். கடல் கடும் கொந்தளிப்பாக இருக்கும்.
அதிக சேதம் ஏற்படும்
எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருப்பவர்களும் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். தாழ்வு மண்டலம் வலுவாக இருப்பதால் அதிக சேதத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்த வரை ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. குளச்சலில் 10 செ.மீ. மழையும், இரணியலில் 9 செ.மீ., தக்கலை 8 செ.மீ., கன்னியாகுமரி, கழுகுமலை 6 செ.மீ., திருச்செந்தூர், தூத்துக்குடி, குளித்துறை, சாத்தான்குளம் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.
கடலூர் -புதுவை வழியாக
சென்னை - நாகை இடையே அனேகமாக கடலூர் - புதுச்சேரி வழியாக கரையை கடக்கும் என எதிர்பார்ப்பதால் அங்குள்ள மீனவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications