அனிதாவுக்கு நீதி.. லயோலா மாணவர்கள் வாயில் கருப்புத் துணியுடன் 2வது நாளாக போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் இரண்டாவது நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் இரண்டாவது நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், லயோலா கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்புத் துணி கட்டி போராடி வருகின்றனர்.
அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் கல்லூரி மாணவர்கள் நேற்று முதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லயோலா கல்லூரி மாணவர்கள் நேற்று காலை முதல் கல்லூரி வாசல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில மாணவர்கள் மட்டும் போராட்டத்தை கைவிடாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளான இன்று வாயில் கருப்புத் துணி கட்டி கல்லூரி வாசலுக்கு அருகில் அமர்ந்து போராடி வருகின்றனர். நீட் தேர்விற்கு கட்டாயம் தடை விதிக்க வேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோளாக உள்ளது.
இதே போன்று இன்று காலை முதல் புதுக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்றும் மத்திய, மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.
Recommended Video
அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று சென்னை பாரிமுனையில் போலீஸ் தடுப்பை மீறி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் நாளான இன்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர்.