நேற்று காஞ்சிபுரம்: இன்று மீனம்பாக்கத்தில் ஜெயலலிதா பிரச்சாரம்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று மீனம்பாக்கத்தில் பிரச்சாரம் செய்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அவரது பிறந்தநாள் அன்று வெளியிட்டார்.

இதையடுத்து அவர் தேர்தல் பிரச்சாரத்தை நேற்று காஞ்சிபுரத்தில் இருந்து துவக்கினார். இதைத் தொடர்ந்து அவர் இன்று சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையின் அருகே ஜெயலலிதாவுக்கு 100 அடி உயர கட் அவுட்டும், மேடைக்கு எதிரே நாடாளுமன்ற வடிவில் பிரமாண்ட கட் அவுட்டும் வைக்கப்பட்டுள்ளன.
மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து ஜெயின் கல்லூரி வரை அதிமுக கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளதோடு பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் ஜெயலலிதா ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான ராமசந்திரனை ஆதரித்து பேசுகிறார்.
ஜெயலலிதா வருகையையொட்டி மீனம்பாக்கத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications