தமிழகத்தில் 6 இடங்களில் போட்டியிடும் ஐக்கிய ஜனதாதளம்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 6 இடங்களில் போட்டியிடப் போவதாக ஐக்கிய ஜனதாதளம் கட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளத்தின் ஆட்சி மன்ற குழு கூட்டம் அரக்கோணத்தில் நடைபெற்றது. ஆட்சி மன்ற தலைவர் சம்பத் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் வேலூர், அரக்கோணம், ஈரோடு, கோவை, கன்னியாகுமரி, திருவள்ளூர் ஆகிய 6 இடங்களில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடுகிறது. இது தவிர திண்டுக்கலிலும் போட்டியிடலாமா என்று ஆலோசனை நடத்தி வருகிறோம்.
கூட்டணி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். வாக்காளர்களின் சதவிகிதம் அதிகரித்துள்ளது. வரும் தேர்தலில் ஊழல் அரசியல்வாதிகள், வன்முறை, மதவெறி பிடித்த அரசியல் கட்சிகள் ஆகிவயற்றை வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும். மத்தியில் 3வது அணி தலைமையில் ஆட்சி அமையும் வகையில் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். ஆட்டோ, இரு சக்கர வாகனம் மற்றும் வாங்கிகள் மூலம் பணப் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க வேண்டும். பதட்டமான இடங்களில் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசாரை நிறுத்த வேண்டும்.
வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மேலும் வாக்குச்சாவடியில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு உணவு வழங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.