நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு
சென்னை: 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகை ரம்பா. தன்னுடைய அழகு, கவர்ச்சி, துள்ளலான நடிப்பு, கமர்ஷியல் ஹிட் படங்கள் என ஒரு காலத்தில் கோலிவுட்டை கலக்கிய ரம்பா, தற்போது தன்னுடைய தந்தையை நினைத்து பகிர்ந்துள்ள உணர்ச்சிபூர்வமான பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தந்தையின் இறப்பு
தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த ரம்பா, உருக்கமாக, "Dear Appa, I know that nobody can ever replace the place you hold in my heart. Despite the fights and the trouble I may have caused, you always met everything with that same smile. The world feels empty now that you are gone. I miss you so much, Naana. With love" அதாவது "அப்பா, என் இதயத்தில் நீங்கள் பிடித்திருக்கும் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
நான் சண்டை போட்டாலும், பிரச்சனைகள் கொடுத்தாலும், நீங்கள் எப்போதும் அதே புன்னகையோடு எல்லாவற்றையும் எதிர்கொண்டீர்கள். நீங்கள் இல்லாததால் உலகமே வெறுமையாகிவிட்டது. உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன்" என்ற அவரது வார்த்தைகள் பலரது மனதையும் உருக்கியுள்ளது.

நடிகை ரம்பாவின் பதிவு
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ரம்பாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். "பெற்றோரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது", "உங்கள் வலியை உணர்கிறோம்", "ஸ்டே ஸ்ட்ராங்" என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நடிகை ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி என்பது ஒரு சிலருக்கு தான் தெரிந்திருக்கும். ஆந்திரப் பின்னணியை சேர்ந்த அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், போஜ்புரி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். 90களில் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக இருந்தார்.
நடிகை ரம்பாவின் ஆரம்ப காலம்
தமிழ் சினிமாவில் அவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், நினைத்தேன் வந்தாய், காதலா காதலா போன்ற படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக ரஜினிகாந்த், விஜய், அஜித், கார்த்திக், பிரபுதேவா, சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த ரம்பா, ஒரு காலத்தில் தயாரிப்பாளர்களின் முதல் தேர்வாக இருந்தார். கமர்ஷியல் சினிமாவில் ரசிகர்களை கவரும் நட்சத்திரமாகவே அவர் பார்க்கப்பட்டார்.
சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆனார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். தற்போது தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் வாழ்க்கையை நடத்தி வருகிறார். இடைக்கிடையே டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

குடும்பத்தில் ஏற்பட்ட சோகம்
திரை உலகில் சிரித்த முகத்துடன் ரசிகர்களை கவர்ந்த ரம்பா, தனிப்பட்ட வாழ்க்கையில் தந்தையின் இழப்பை இன்னும் மறக்க முடியாமல் தவித்து வருகிறார் என்பது அவரது இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிகிறது.
எவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், பெற்றோரின் இழப்பு என்பது அனைவரையும் ஒரே மாதிரி உடைத்துவிடும் என்பதற்கு ரம்பாவின் இந்த உருக்கமான பதிவு ஒரு உதாரணமாக மாறியுள்ளது. தற்போது இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.














Click it and Unblock the Notifications