கொடைக்கானலில் 4 சுற்றுலா தலங்களுக்கு கட்டணம் கிடையாது! சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை குட் நியூஸ்!
திண்டுக்கல்: கோடை விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் நலனை கருத்தில் கொண்டு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 4 சுற்றுலா தலங்களுக்கு கட்டணம் கிடையாது என்று வனத்துறை அறிவித்துள்ளது. வரும் 31ஆம் தேதி வரை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், தமிழகத்தில் உள்ள மிகச்சிறந்த கோடை வாசஸ்தலங்களில் ஒன்றாக உள்ளது. தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. கோடை விடுமுறை முடிவடைய இன்னும் ஒரு வார காலமே உள்ள சூழலில் கடந்த சில நாட்களாக கடுமையான கூட்டம் காணப்படுகிறது.

இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது. மலைச்சாலையில் பல மணி நேரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காண முடிகிறது. கடுமையான போக்குவரத்து நெரிசலை தாண்டி கொடைக்கானலுக்கு வந்தால், சுற்றுலா தலங்களிலும் காணும் இடமெல்லாம் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக குணா குகை, பைன் மரக்காடுகள், பேரிஜம் ஏரி போன்ற இடங்களில் எல்லாம் சாரை சாரையாக சுற்றுலா பயணிகள் செல்வதை காண முடிகிறது.
இந்த நிலையில், கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் நலனை கருத்தில் கொண்டு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 4 சுற்றுலா தலங்களுக்கு கட்டணம் கிடையாது என்று வனத்துறை அறிவித்துள்ளது. தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மேயர் சதுக்கம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல கட்டணம் கிடையாது என்று வனத்துறை அறிவித்துள்ளது. வரும் 31ஆம் தேதி வரை கட்டணம் இன்றி சுற்றுலா பயணிகள் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்காக கியூஆர் கோடு மூலம் வனத்துறையினர் டிக்கெட் கட்டணம் வசூலிக்கிறார்கள். பின்னர் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு செல்லும் போது இந்த டிக்கெட்டை பரிசோதித்த பிறகே வனத்துறை அனுமதித்து வந்ததால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதனையடுத்து முதல்வர் விஜய் அறிவுறுத்தலின் பேரில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு கட்டணம் இன்றி சென்று வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.














Click it and Unblock the Notifications