தேர்தல் பிரச்சார களத்தில் அதிமுக வேட்பாளர்கள்: வாக்காளர்களை கவர குத்து டான்ஸ்
சென்னை: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதை அடுத்து தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. தமிழகத்தில் அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது அதிமுக.
கடந்த மார்ச் 3ம் தேதி முதல்வர் ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கியதை அடுத்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.
வாக்காளர்களை கவர பல விதங்களில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர் வேட்பாளர்கள்.

அரக்கோணத்தில் அரி
அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் அரி கடந்த மூன்று நாட்களாக சுறுசுறுப்பாக பிரச்சாரம் செய்து வருகிறார். 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகளை சந்தித்து அவர் ஆதரவு திரட்டுவதோடு வாக்காளர்களையும் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

திருச்சி வேட்பாளர் பிரச்சாரம்
அதிமுகவின் திருச்சி வேட்பாளர் ப.குமார் புதுக்கோட்டையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அமைச்சர்கள் மற்றும் தொண்டர்களுடன் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

கரூரில் குத்து டான்ஸ்
அதிமுக வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தில் சில சுவாரஸ்ய சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. கரூர் தொகுதியில் தம்பித்துரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அங்கு பிரச்சாரத்தை தொடங்கியுள்ள அதிமுகவினர் வாக்காளர்களை கவரும் வகையில் குத்து டான்ஸ்சும் ஏற்பாடு செய்துள்ளனர்.

நடிகர்களைக் காணோமே
அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டாலும் கட்சியில் பிரச்சார பீரங்கிகளாக உள்ள முக்கிய நடிகர், நடிகையர்கள் இன்னும் பிரச்சாரத்தை தொடங்கவில்லை. அதுவரை இப்படி குத்து டான்ஸ் போட்டு கூட்டத்தை கவர் செய்துதான் ஆகவேண்டும் என்கின்றனர் எதிர்முகாமில் உள்ளவர்.

மானாட மயிலாட வருமோ?
அதிமுக தரப்பில் குத்து டான்ஸ் பிரச்சார யுக்தியைப் பார்த்த திமுக தரப்பு ‘மானாட மயிலாட' குரூப்பை பிரச்சாரத்தில் இறக்கிவிடலாமா என்று யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications