டி.என்.பி.எல் கிரிக்கெட்... 'ஹாட்ரிக்' தோல்வியில் மதுரை சூப்பர் ஜெயிண்ட்ஸ் !
நெல்லை: டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் மதுரை சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் நெல்லையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்-மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.
தருண் ஸ்ரீனிவாஸ் 45 (32), ரவிகுமார் ரோகித் 40 (19), சூர்ய பிரகாஷ் 36 (21) ரன்கள் குவித்தனர். மதுரை தரப்பில் சிங்கமுத்து தியாகராஜன் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அந்த அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.
மதுரை அணியில் அருண் கார்த்திக் 73 (44) குவித்தார். கோவை தரப்பில் முகமது, கிருண்ஷமூர்த்தி விக்னேஷ் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
3 போட்டிகளில் விளையாடியுள்ள கோவை அணிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும். மதுரை அணி விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.