எம்ஜிஆர் பிறந்தநாள்: நினைவிடத்திற்கு செல்லாமல், போயஸ் கார்டனிலேயே மரியாதை செலுத்திய ஜெ.!
சென்னை: அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனது போயஸ் கார்டன் வீட்டிலேயே, எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக நிறுவனரும், அக்கட்சியினரால் இதய தெய்வம் என்று வர்ணிக்கப்படுபவருமானவர் எம்.ஜி.ஆர். முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆரின் 98வது பிறந்த நாள் தினம் இன்றாகும்.
வழக்கமாக மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால், பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே இருக்கும், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தையும் போயஸ் கார்டனிலுள்ள தனது வீட்டிலேயே அனுசரித்தார்.
அங்கு எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு ஜெயலலிதா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில், வாழ்க்கையில் கஷ்டங்கள் வருவது சகஜம். அதை வென்று, வெளிவருவதில்தான் சுவாரசியம் அடங்கியுள்ளது என்று ஜெயலலிதா தனது தொண்டர்களிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார்.