2 சஸ்பெண்ட்.. ஒரு டிஸ்மிஸ்.. இது மு.க.அழகிரியின் கதை!
மதுரை: ஒரு வழியாக மு.க.ஸ்டாலினின் இன்னொரு முக்கிய எதிராளியை கட்சியை விட்டுத் தூக்கி விட்டது திமுக.
அந்த முடிவையும் முதல் முடிவைப் போலவே கருணாநிதி வாயாலேயே அறிவிக்கவும் செய்து விட்டனர். இந்த முடிவு நிச்சயம் அழகிரி எதிர்பார்த்த ஒன்றாகத்தான் இருக்கும். காரணம், நிலைமை அப்படி.
மு.க.ஸ்டாலினுக்காக திமுகவில் காவு கொடுக்கப்பட்ட 2வது முக்கியப் புள்ளியாக வைகோவுக்கு அடுத்து அழகிரி வெளியேற்றப்பட்டு்ளார்.
வைகோ, கருணாநிதியின் உடன் பிறவா சகோதரராக பாசம் பாராட்டப்பட்டவர். அழகிரியோ, ஸ்டாலினின் உடன் பிறந்த சகோதரர். இந்த இரு சகோதரர்களுமே ஸ்டாலினுக்கு வழி ஏற்படுத்துவதற்காக திமுகவை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் என்பதுதான் இங்கு முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியது.

காலம் காலமாக இருந்து வந்த மோதல்
அழகிரிக்கும் சரி, ஸ்டாலினுக்கும் சரி இன்று நேற்றல்ல, பல காலமாகவே மோதல்தான். யார் அடுத்த வாரிசு என்பதில். இந்த மோதலில் தெரிந்தோ தெரியாமலோ ஸ்டாலின் பக்கம் இருந்து விட்டார் கருணாநிதி.

முரட்டுப் பிள்ளை
ஸ்டாலினைப் போல இல்லை அழகிரி. சற்று முரட்டுத்தனமானவர், அதிரடியாக இருக்கக் கூடியவர். எதுவாக இருந்தாலும் வெட்டு ஒனறு துண்டு இரண்டு என்று செயல்படக் கூடியவர். வேகமானவர். இதையே பலமுறை கருணாநிதி கூட குறிப்பிட்டதுண்டு.

மெல்ல விலக்கி வைத்த கருணாநிதி
அழகிரி போக்கைப் பார்த்த கருணாநிதி, இவர் நிச்சயம் ஸ்டாலினுக்கு எதிர்காலத்தில் மிகப் பெரிய சவாலாக வரக் கூடியவர் என்பதை உணர்ந்து அவரை இளம் வயதிலேயே மதுரைக்கு இடம் பெயர்த்து அனுப்பி வைத்தார். இதுதான் ஸ்டாலினுக்கு ஆதரவாக கருணாநிதி எடுத்த முதல் பெரிய நடவடிக்கை.

திருமணம் முடித்த கையோடு மதுரைக்கு வந்த அழகிரி
1972ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி அழகிரிக்குத் திருமணமா்னது. அதன் பின்னர் அவர் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முரசொலியைப் பார்த்துக் கொள்ளத்தான் அப்போது அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

சுயம்புவாக வளர்ந்தவர்
மதுரைக்கு வந்த அழகிரி அவராகவே தன்னை ஒரு தேர்ந்தெடுத்த அரசியல்வாதியாக மாற்றிக் கொண்டார். மெல்ல மெல்ல தனக்கென ஒரு வட்டத்தை ஏற்படுத்தினார். அழகிரி ஆரவு குரூப் அப்போதே வலுவாக உருவாகி விட்டது என்பதுதான் உண்மை்.

மன்னர்களை ஓரம் கட்டியவர்
மதுரையில் அப்போது திமுகவின் அசைக்க முடியாத தலைவர்களாக வலம் வந்த பலரையும் மெல்ல மெல்ல விலக்கியவர் அல்லது தன் பக்கம் ஈர்த்தவர் அழகிரி. பிடிஆர் பழனிவேல்ராஜன், பொன் முத்துராமலிங்கம், அக்னிராஜு என பலரைச் சொல்லலாம்.

அழகிரியின் வேகம் தாங்காமல் ஓடியவர்கள்
கட்சியில் எந்தப் பதவியும் வகிக்காமல், படு கூலாக திமுக தலைவர்களை அலறடித்தார் அழகிரி. அவரது வேகம் தாங்க முடியாமல் பலரும் ஒதுங்கிப் போயினர் அல்லது ஓடிப் போனார்கள்.

அழகிரி சொல்லே இறுதி
ஒரு கட்டத்தில் தென் மாவட்ட திமுகவே அழகிரி கைக்கு வந்து விட்டது. இதை கருணாநிதியோ ஸ்டாலினோ நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அழகிரிக்குக் கொடுக்கப்பட்ட வேலை வேறு, ஆனால் அவர் பண்ணி வைத்த வேலை வேறாகிப் போனதால், கருணநிதியாலேயே அழகிரியைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது ஒரு கட்டத்தில்.

மதுரையிலிருந்துபடி சென்னையை நடுங்க வைத்த அழகிரி
தென் மாவட்ட திமுகவை தன் வசப்படுத்திய அழகிரி, மதுரையில் இருந்தபடியே சென்னையை அலறடித்தார்.

இரு வேறு பார்வை பார்த்த கருணாநிதி
கருணாநிதியின் பார்வைதான் அழகிரி, ஸ்டாலின் இடையிலான மோதல் அதிகரிக்கக் காரணம் என்று திமுகவினரே கூட கூறுவதுண்டு. இருவரையும் சமமாக பார்க்காமல், சமமாக பதவிகளைப் பகிர்ந்தளிக்காமல், ஸ்டாலினுக்கு மட்டும் அவர் பரிவுப் பார்வை பார்த்தார், அரசியல் சொ1ல்லிக் கொடுத்தார் என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால் இதைப் பற்றிப் பொறாமைப்படாமல் தன் கையை ஊன்றி தானே கரணம் அடித்து அரசியல் செய்யக் கற்றுக் கொண்டவர் அழகிரி என்றும் கூறப்படுவதுண்டு.

முதல் நீக்கம்
இப்படி அழகிரி தன் ஸ்டைலில் மதுரையைக் கலக்க ஆரம்பித்ததால் பயந்து போன தலைவர்கள் பலர் கட்சித் தலைமையிடம் முறையிட 2001ம் ஆண்டு அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து வைத்தது திமுக. ஆனால் தொடர்ந்து வந்த சட்டசபைத் தேர்தலில் அழகிரி போட்டி வேட்பாளர்களை நிறுத்தி திமுக வேட்பாளர்களைப் பதம் பார்க்கவே கட்சி பயந்து போய் மீண்டும் அழகிரியை கட்சிக்குள் இழுத்துக் கொண்டது.

வாரிசுப் போரின் உச்சம்
ஒரு கட்டத்தில் வாரிசுப் போர் உச்சத்தை அடைந்தது. தினகரன் நாளிதழில் கருணாநிதிக்கு அடுத்து யார் என்று சர்வே நடத்தி அழகிரி பெயரை கடைசியில் போட்டு விட்டனர். கொந்தளித்துப் போன அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் நடத்திய வன்முறையால் நாடே கலங்கிப் போனது. தினகரன் நாளிதழ் அலுவலகம் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளானது. 3 உயிர்கள் கருகிப் போயின.

2008ல் அதிரடி அழகிரி
இந்த நிலையில் கலவரத்திற்குப் பின்னர் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார் அழகிரி. ஸ்டாலினுக்கும், அவருக்கும் இடையே நட்புறவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. அதை மெய்ப்பிப்பது போல 2008ல் நடந்த 3 சட்டசபை இடைத் தேர்தலில் திமுகவை பிரமாதமாக வெற்றி பெற வைத்தார் அழகிரி. அதில் முக்கியமானது திருமங்கலம்.

திருமங்கலம் பார்முலா
திருமங்கலம் பார்முலா என்று பின்னர் வந்த இடைத் தேர்தல்களுக்குப் பெயர் வைக்கும் அளவுக்கு பிரபலமாகிப் போனது திருமங்கலத்தில் திமுகவுக்குக் கிடைத்த வெற்றி.

முதல் முறையாக பதவி
இந்த வெற்றிகளைத் தொடர்ந்து முதல் முறையாக திமுகவில் அழகிரிக்குப் பதவி வழங்கப்பட்டது. திமுக தென் மண்டல ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார் அழகிரி.

முதல் முறையாக எம்.பி.
இதைத் தொடர்ந்து 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டார் அழகிரி. எம்.பியும் ஆனார்.

முதல் முறையாக மத்திய அமைச்சர்
அதைத் தொடர்ந்து மத்தியஅமைச்சர் பதவியும் அவருக்கு திமுகவால் வாங்கித் தரப்பட்டது. புதிய அந்தஸ்துடன் மதுரையை வலம் வந்தார் அழகிரி.

விஜயகாந்த்தால் வந்த மோதல்
சமீபத்தில் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே மோதல் வெடிக்க விஜயகாந்த்தான் காரணம் என்று சொல்லலாம். அதாவது விஜயகாந்த்தை கூட்டணிக்கு இழுக்க முயன்ற திமுகவின் முயற்சிகளுக்கு, ஸ்டாலின் முயற்சிகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்தார் அழகிரி. இதுதான் மோதல் பெரிதாக வெடிக்கக் காரணம்.

போஸ்டர் போர்
இதை வைத்து போஸ்டர் போரில் குதித்தனர் அழகிரி ஆதரவாளர்கள். அது தலைமையை நேரடியாக சீண்டியது. ஸ்டாலின் கொதித்தார், கொந்தளித்தார், கோபப்பட்டார். கருணாநிதியே கூட இதனால் அப்செட் ஆனார். இதையடுத்து மறுபடியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் அழகிரி.

2வது முறையாக சஸ்பெண்ட்
2வது முறையாக திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அழகிரி அத்தோடு ஓயவில்லை. தொடர்ந்து முழு வேகத்தில் அவர் செயல்பட்டதால் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்தது. இப்போது அவரை ஒரேயடியாக கட்சியை விட்டு நீக்கி விட்டனர்.

அடுத்து என்ன நடக்கும்....
அழகிரி திமுகவில் இருந்தபோதும் சரி, இல்லாமல் போனபோதும் சரி ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் வழக்கம் போல செயல்பட்டவர். இப்போது திமுகவை விட்டு முதல் முறையாக அவரை நிரந்தரமாக நீக்கியுள்ளனர். நிச்சயம் அவர் விஸ்வரூபம் எடுப்பார் என்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது அடுத்து என்பது நாளைய வரலாற்றுக்கு முக்கியமான செய்தியாக அமையும் என்பது உறுதியானது.












Click it and Unblock the Notifications