திருவாரூரில் மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின், டி.ஆர். பாலு கைதாகி விடுதலை
திருவாரூர்: விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்புப் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. திருவாரூரில் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.

ஆதரவு
இதற்கு லாரிகள் உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் என அனைத்துத் தரப்பும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒன்றிணைந்து போராட்டத்தில் குதித்தன.

திருவாரூரில் பேரணி
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி திருவாரூரில் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பேரணியாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

அனைத்துக் கட்சி
ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின் கைது
திருவாரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டார். மேலும், போராட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர்.

பொதுமக்கள் பங்கேற்பு
விவசாயிகள் தொடர்பான போராட்டம் என்பதால் திருவாரூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைத்து விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களும் சுமார் 2000க்கு மேல் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications