ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் கைது.. விடுதலை செய்ய மு.க. ஸ்டாலின் டிஜிபியிடம் மனு
ஜல்லிக்கட்டு ஆதரவாக போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
சென்னை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்களை தடியடி நடத்தி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி டிஜிபி அலுவலத்திற்கு நேரில் சென்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.
மனுவை அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி காவல்துறை தலைவரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்தேன். பண்டிகை காலம் என்பதால் அவர் விடுமுறையில் இருப்பதாக சொல்லிவிட்டார்கள். அதனால் கொண்டு சென்ற மனுவை டிஎஸ்பியிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.

பின்னர், டிஜிபியிடம் தொலைபேசியில் பேசினேன். ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் கைது குறித்து எடுத்துரைத்தேன். அதற்கு அவர், தான் கவனித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார்.
உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று அங்கு மாணவர்களும் இளைஞர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளது கொடுமையானது. போராட்டம் நடத்தியவர்களுக்கு உணவு வழங்கியவர்கள் கூட அங்கே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களை அனைவரையும் போலீசார் விடுதலை செய்ய வேண்டும்.
மேலும், தை திங்கள் முடிவதற்குள் அலங்காநல்லூர் உட்பட தமிழகத்தில் எந்தெந்த இடத்தில் ஜல்லிக்கட்டு நடக்குமோ அங்கெல்லாம் ஜல்லிக்கட்டை நடத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் கைது.. விடுதலை செய்ய மு.க. ஸ்டாலின் டிஜிபியிடம் மனு pic.twitter.com/c0XQCJmbcF
— Oneindia Tamil (@thatsTamil) January 17, 2017
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிக மோசமாக உள்ளது. இந்த நிலையில் தமிழக காவல்துறை தலைவர் விடுமுறையில் இருக்கிறார் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications