சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையின் பல தொகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமான வாக்காளர்களின் கை பிடித்து குலுக்கியும், பாட்டிகளின் கை பிடித்தும் அவர் ஆதரவு திரட்டினார்.தமிழக சட்டசபை தேர்தல் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாக்காளர்களை அட்டாக் செய்து வருகின்றனர். சனிக்கிழமை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய உள்ள நிலையில் சென்னையில் இன்று வீதி வீதியாக நடந்து சென்று ஸ்டாலின் ஓட்டு வேட்டையாடினார்.த தி.மு.க.-காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15ம்தேதி முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சென்னையில் ஏப்ரல் 28ம்தேதி ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், மாதவரம், பெரம்பூர், அண்ணாநகர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு ஆகிய 8 தொகுதிகளிலும் வாக்கு சேகரித்தார்.மே 4ம்தேதி, மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தியாகராயநகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளிலும் வேன் மூலம் வீதி, வீதியாக சென்று தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு சேகரித்தார். நமக்கு நாமே பயணம் போல இன்று எழும்பூர் தொகுதிக்குட்பட்ட நட்ராஜ் திரையரங்கம் அருகில் காலை 7 மணிக்கே பிரசாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின் ல் காலை 8 மணி வரையில் வீடு, வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். காலை நேரத்திலும் ஸ்டாலினை பார்க்க ஏராளமான திமுகவினர் குவிந்தனர். பலரும் அவருடன் கை குலுக்கினர். வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின் அங்கிருந்த டீ கடை ஒன்றில் சூடாக டீ சாப்பிட்டார். ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் பெண்களும் திரண்டனர். பலரும் தங்களின் குழந்தைகளை ஸ்டாலினிடம் கொடுத்தனர். அப்போது அவர் குழந்தைகளை வாங்கி கொஞ்சி விட்டு கொடுத்தார். வயதான தாய்மார்களை பார்த்து வணங்கிய ஸ்டாலின், சிறுவர்களிடமும் பேசியபடியே நடந்தார். அப்போது தன்னை பார்த்து வணங்கிய பாட்டியின் கையை பிடித்து ஆதரவு கேட்டார். தியாகராயநகர் தொகுதிக்குட்பட்ட தங்கல் கரை பகுதியில் 9 மணி முதல் 10 மணி வரையிலும், துறைமுகம் தொகுதிக்குட்பட்ட மண்ணடியில் காலை 10.15 மணி முதல் 11 மணி வரையிலும் வாக்கு சேகரித்தார். தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக, வெற்றி பெறும் என்று கூறிய ஸ்டாலின் தி.மு.க., வெற்றி பெற்ற பின்னர் கரப்சன், கமிஷன் இல்லாத ஆட்சி அமைக்கப்படும் என்றார் ஓட்டுக்கு ஆளும்கட்சியினர்தான் பணம் கொடுக்கின்றனர் என்றும் தெரிவித்தார். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின், எதிர்க்கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறினார். திராவிட கட்சிகளை விமர்சனம் செய்து பிரசாரம் செய்வது பாஜகவின் வாடிக்கை என்றும் தெரிவித்தார். ஜெயலலிதா நேற்று 16 தொகுதிகளிலும் வேனில் வலம் வந்து வாக்கு சேகரித்தார். அதேபோல ஸ்டாலின் இன்று காலையிலேயே முக்கிய தொகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். இரண்டு தலைவர்களின் பிரச்சாரத்தினால் சென்னை நகரத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.