ஸ்டாலினை திடீரென அழைத்த ஆளுநர்... சந்திப்பின் போது பேசியது என்ன?
தமிழக ஆளுநர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து தம்மிடம் நேரில் விளக்கம் அளித்ததாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : தமிழக சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து விளக்கம் அளிப்பதற்காகவே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தம்மை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்ததாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த பின்னர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : நேற்று இரவு திடீரென ராஜ்பவனில் இருந்து அழைப்பு வந்தது, இன்று 6 மணியளவில் ஆளுநர் சந்திக்க விரும்புகிறார் என்று சொன்னார்கள். என்ன காரணத்திற்காக ஆளுநர் அழைக்கிறார் என்று தெரியவில்லை இருந்த போதும் ஆளுநர் அழைப்பதால் நானும், துரைமுருகனும் ஆளுநரை சந்தித்தோம்.
இந்த சந்திப்பின் போது சட்டபல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக சாஸ்திரி என்பவரை நியமித்தது தவறு என்று நான் ஆளுநருக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி இருந்தேன். அது குறித்த விளக்கத்தை ஆளுநர் என்னிடம் தந்தார், பரிந்துரைக்கப்பட்ட 3 பெயர்களில் ஒருவரைத் தான் துணைவேந்தராக நியமித்துள்ளேன் என்று ஆளுநர் கூறினார்.

ஆராய்ந்த பின்னரே நியமனம்
சாஸ்திரி மீது ஏற்கனவே புகார் இருக்கிறதே என்று கேட்டதற்கு, அது உண்மை தான். ஆனால் ஒரு குழு அமைக்கப்பட்டு அது குறித்து விசாரிக்கப்பட்டது அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பது தெரிய வந்த பிறகு தான் சாஸ்திரி துணைவேந்தராக நியமிக்கப்பட்டார் என்று ஆளுநர் விளக்கம் அளித்தார்.

மாவட்டங்களில் ஆய்வு கூடாது
இதனைத்தொடர்ந்து ஆளுநரிடம் நாங்கள் ஒரு கோரிக்கையை முன் வைத்தோம். தமிழகத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கும் போது மாவட்டங்களில் ஆளுநர் ஆய்வு நடத்துவது சரியா என்று கேட்டோம். அதற்காகத் தான் ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவதாக தெரிவித்தோம்.

வளர்ச்சியை தான் பார்க்கிறேன்
அதற்கு ஆளுநர் தான் ஆய்வு செய்யவில்லை என்றும் தமிழகத்தின் ஆளுநராக இருப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்காகத் தான் செல்கிறேன் என்று சமாதானமான ஒரு பதிலை சொன்னார். ஆனால் அந்த பதிலை நாங்கள் ஏற்கவில்லை.

ஆளுநர் உறுதி
ஆட்சி நடக்கும் போது ஆளுநர் ஆய்வு செய்வது தவறு என்பதை அவரிடம் அழுத்தமாக கேட்டோம். இதனை கேட்டுக் கொண்டவர் தனது ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிப்பதாக கூறி இருக்கிறார். இது தான் ஆளுநருடனான சந்திப்பின் போது பேசப்பட்ட விஷயங்கள் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications