நாஞ்சில் சம்பத் பேசறது எல்லாம் ஒரு பேச்சா.. நேரத்தை வீணடிக்காதீங்க.. ஊடகங்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ்
கொளத்தூர் தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவரும், அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவுமான மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் நாஞ்சில் சம்பத்தை கிண்டல் அடித்தார்.
சென்னை: கொளத்தூரில் 90 சதவீதம் குடிநீர் பிரச்சனை இருப்பதாகவும், அவற்றை அரசு உடனடியாக தீர்க்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் அந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ. மு.க. ஸ்டாலின் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.
இதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின் கூறியதாவது; கொளத்தூர் தொகுதியில் உள்ள ரமணா நகர் குடிசை மாற்று வாரிய கட்டடங்கள் பெரிதும் பழுதடைந்துள்ளன. அவற்றை கட்டித் தர வேண்டும் என்று ஏற்கனவே கோரியுள்ளேன்.
பழுதடைந்த வீடுகள்
அதற்கான நடவடிக்கைகள் விரைவாக முடித்து தரப்படும் என்ற சட்டசபையில் அமைச்சர் உறுதி அளித்தார். ஆனால் இன்னும் அது முடித்துத் தரவில்லை. அரசின் சார்பில் நிதி ஒதுக்கி அந்தப் பணியை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்றாலும் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து நிறைவேற்றுவேன்.
குடிநீர் பிரச்சனை
கொளத்தூரில் 90 சதவீத இடங்களில் குடிநீர் பிரச்சனை இருந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சனையை குறித்து குடிநீர் வடிகால் வாரியம் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இதற்காக ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
டாஸ்மாக்
நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடப்பட்டுவிட்டதால், நெடுஞ்சாலைகளை வகைமாற்றம் செய்யும் வேலையில் தமிழக அரசு உள்ளது. டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்களுக்கு கொடுக்கவில்லை. மக்கள் பிரச்சனைகளைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.
நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத் திமுக பற்றி பேசுவதெல்லாம் ஒரு பேச்சா? அவர் பேசுவதற்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய நேரத்தையும் உங்களுடைய நேரத்தையும் வீணடிக்க விருப்பவில்லை என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.