வைகோவை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்.. தம்பி மகன் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்!
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து தனது தம்பி மு.க.தமிழரசுவின் மகன் நடிகர் அருள் நிதியின் திருமணத்திற்கு வருமாறு கூறி அழைப்பு விடுத்தார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
அருள் நிதி திருமணத்திற்காக ஒவ்வொரு தலைவராக நேரில் போய் அழைத்து வருகிறார் மு.க.ஸ்டாலின். விஜயகாந்த், இளங்கோவன், ஜி.கே.வாசன் ஆகியோரை அழைத்துள்ள அவர் தற்போது இன்று வைகோவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
வைகோவின் அண்ணா நகர் இல்லத்திற்குச் சென்ற ஸ்டாலினை, வைகோ, வீட்டுக்கு வெளியே வந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். இருவரும் தனியாக பேசியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடைசியாக பாமக. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பேத்தி திருமண விழாவில் வைகோவும், ஸ்டாலினும் சந்தித்துக் கொண்டனர். அதன் பின்னர் இன்று இருவரும் நேரில் சந்தித்துள்ளனர்.
ராமதாஸ் பேத்தி திருமண விழாவின்போது இவர்கள் இருவரும் சந்தித்ததை வைத்து கூட்டணி உருவாகப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை வைகோ திட்டவட்டமாக பின்னர் மறுத்து விட்டார். தற்போதும் கூட ஸ்டாலினின் இந்த அழைப்பிதழ் பயணம், கூட்டணியை
உருவாக்குவதற்கான பயணம் என்றே வர்ணிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.