வைகோ தாயார் மறைவு: ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திருமாவளவன் நேரில் அஞ்சலி
திருநெல்வேலி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் கலிங்கப்பட்டிக்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் 97 வயது தாயார் மாரியம்மாள் வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்காக கலிங்கப்பட்டியில் உள்ள வைகோவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் வைகோவின் தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அஞ்சலி
வைகோவின் தாயாரின் உடலுக்கு இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அஞ்சலி செலுத்தினார்.

ஸ்டாலின் அஞ்சலி
அவரைத் தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வைகோவின் தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், எனது திருமணம் முடிந்து ஆசி பெற வந்தபோது வைகோ தாயார் அன்புடன் வரவேற்றார். உணவு சமைத்து அன்புடன் பரிமாறினார். அன்புடனும், பாசத்துடனும் பழகும் குணத்தை உடையவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறினார்.

முத்தரசன், திருமாவளவன் அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வைகோவின் தாயார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கலிங்கப்பட்டிக்கு வந்து மாரியம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ஜி. ராமகிருஷ்ணன், அற்புதம்மாள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆகியோரும் வைகோவின் தாயார் மாரியம்மாள் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச்சடங்கு
மாரியம்மாளின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்ற பின்னர் இன்னும் சற்று நேரத்தில் கலிங்கப்பட்டியில் உள்ள மயானத்தில் நல் அடக்கம் நடைபெற உள்ளது. இதில் உள்ளூர் பிரமுகர்களும், அரசியல் கட்சித்தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications