2 வாரமாக அகற்றப்படாத மரங்கள்.. வேலையே செய்யாத மாநகராட்சி... ஸ்டாலின் குற்றச்சாட்டு
வர்தா புயல் கடந்து 2 வாரங்களாகியும் சாலைகளில் இருந்து மரங்கள் இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: வர்தா புயல் கடந்து 2 வாரங்கள் கடந்து விட்ட நிலையில், சாலைகளில் முறிந்து விழுந்த மரங்கள் இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளன. இதற்கான எந்த முயற்சியையும் மாநகராட்சி செய்யவில்லை என்று திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திரு.வி.க. நகர், கே.சி.கார்டன், டாக்டர் அம்பேத்கர் நகர், ஜி.கே.எம் காலனி ஆகிய பகுதிகளில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மருத்துவ முகாம்கள் நேற்று நடத்தப்பட்டன. இந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் மருந்து, மாத்திரைகளை வழங்கிய பின்னர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இரண்டு வாரங்கள் நெருங்கி விட்ட நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வர்தா புயல் பாதிப்பிற்குள்ளான பொதுமக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் இருப்பது வேதனைக்குரியது. குறிப்பாக சாலைகளில் விழுந்துள்ள மரங்கள் கூட முழுமையாக அகற்றப்படாமல் உள்ளன. அரசும், சென்னை மாநகராட்சி நிர்வாகமும் செயல்படாமல் முடங்கி போயுள்ளது.
அதிமுக அமைச்சர்களும், அதிகாரிகளும் எப்போது வருமான வரித்துறையின் சோதனை நடைபெறுமோ என்ற அச்சத்தில், வர்தா புயல் பாதிப்பில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்காமல், செயலற்ற நிலையில் உள்ளனர்.
இப்படிப்பட்ட அசாதாரண நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், தொய்வின்றி பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நிவாரணப் பணிகள் மேற்கொண்டு, தொற்று நோயால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் மருத்துவ முகாம்களும் தொடங்கப்பட்டு மருத்துவ உதவிகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறோம்.
ஆகவே, அ.தி.மு.க அரசு இனியாவது விரைவாக செயல்பட்டு, வர்தா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.