சட்டசபையை எப்ப கூட்டுவீங்க முதல்வர்? கேட்கிறார் மு.க.ஸ்டாலின்
சென்னை: விவாதிக்க நிறைய பிரச்சினைகள் இருக்கிறது முதல்வர் பன்னீர் செல்வம் சட்டப்பேரவை கூட்டாமல் இருப்பது ஏன் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், சட்டப் பேரவையினைக் கூட்டி, தமிழக மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற தீர்மானத்தையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் அன்றாடம் அடுக்கடுக்கான பிரச்சினைகள் எழுகின்றன. மாநிலத்திற்கு புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொதுவாக ஆண்டு தோறும் அக்டோபர் திங்களில் கூட்டப்படும் குளிர்காலத் தொடரும் இந்த ஆண்டு நடைபெறவில்லை.
தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு பொய்க் காரணம் கூறி இலங்கை அரசு தூக்குத் தண்டனை விதித்து, அதனைக் கண்டித்து தமிழக அரசு சார்பிலும், அனைத்துக் கட்சிகள் சார்பிலும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசும் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்தத் தண்டனையைக் கண்டித்து தமிழகத்திலே உள்ள 13 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.
எனவே இந்த நிலையில் தமிழகச் சட்டப் பேரவையினைக் கூட்டி, தமிழக மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற தீர்மானத்தினை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். இதுதவிர தமிழக மக்களின் அன்றாடப் பிரச்சினைகளான பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவைகளைப் பற்றியும் பேரவையில் விவாதிக்க வேண்டியியுள்ளது.
எனவே, தமிழகச் சட்டப் பேரவையினை கூட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழக முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications