ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் அதிமுகவின் மல்லுக்கட்டு பற்றி பேச விரும்பவில்லை - ஸ்டாலின்
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண அலங்காநல்லூர் வந்துள்ள மு.க.ஸ்டாலின், அதிமுகவில் நடைபெறும் மல்லுக்கட்டு பற்றி பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
மதுரை: பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காளைகளும், காளையர்களும் கடுமையாக களத்தில் ஆடி வருகின்றனர்.
அடக்க நினைக்கும் காளையர்கள், அடங்க மறுக்கும் காளைகள் என ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை உலகம் முழுவதும் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தொலைக்காட்சி நேரலைகளில் ரசித்து வருகின்றனர்.
பெரும் போராட்டத்திற்குப் பிறகு தமிழகத்தின் பாராம்பரியம் மீட்கப்பட்டுள்ளது. இந்த போட்டியைக் காண பல அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் ஆளுங்கட்சியில் நடைபெறும் மல்லுக்கட்டு காரணமாக சசிகலாவும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அலங்காநல்லூருக்கு வர முடியவில்லை.
எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி குழுவினர் அழைப்பு விடுத்தனர். அப்போதே வருவதாக கூறிய ஸ்டாலின், இன்று காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதிக்கு வந்தார். மேடையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுடன் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்தார்.
இளைஞர்களுக்கு பாராட்டு
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போட்டிக்காக தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், மக்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாகவே தமிழகத்தின் பாரம்பரியம் காக்கப்பட்டுள்ளது என்றார்.
ஜல்லிக்கட்டு போட்டி
ஜல்லிக்கட்டு போட்டிக்காக போராடி இன்று இந்த விழா நடக்க காரணமாக உள்ள அனைவருக்கும் நன்றி, பாராட்டு என்று கூறிய ஸ்டாலின், இது அரசியல் விளையாட்டு அல்ல. அதிமுக மற்றும் திமுகவிற்கு எதிரான மல்லுக்கட்டு அல்ல என்றார்.
பாரம்பரிய விழா
தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு விழாவைக் காண நான் ஏற்கனவே வந்துள்ளேன். இந்த ஆண்டு விழாக்குழுவினர் அழைத்தனர். அதனால் விழாவைக் காண வந்துள்ளேன் என்றார். இங்கு அரசியல் பேச வரவில்லை என்றும் கூறினார்.
அதிமுக மல்லுக்கட்டு
நான் ஜல்லிக்கட்டு காண மட்டுமே வந்துள்ளேன். இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் அதிமுகவில் நடைபெறும் மல்லுக்கட்டு பற்றி பேச விரும்பவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
விழா நாயகர்கள்
அதிமுகவில் நடைபெற்றும் அரியணைப் போட்டியால் சசிகலா, ஓபிஎஸ் ஆகிய இருவரினாலுமே அலங்காநல்லூருக்கு போக முடியாமல் போய்விட்டது. இப்போது மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும், எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினும் விழா நாயகர்களாக பங்கேற்றுள்ளனர்.
அடங்காத காளையை வளர்த்த ஒரு மாட்டுக்காரருக்கும், காளையர்களுக்கு தங்கக் காசு பரிசுகளும் வழங்கினார் ஸ்டாலின்.