மத்திய அரசின் இசட் பிளஸ் பாதுகாப்பு படையினர் எங்கே சென்றார்கள்?- ஸ்டாலின் கேள்வி
சென்னை : முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய அரசின் இசட் ப்ளஸ் பாதுகாப்பு படையினர் எங்கே சென்றனர்? 75 நாட்களும் அவர்கள் என்ன செய்தனர்? 75 நாட்களும் அவர்கள் என்ன பணியாற்றினர் என்பது மத்திய அரசின் உள்துறைக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறதா இல்லையா? அப்படியெனில், ஜெயலலிதா அம்மையாரின் நலன் குறித்து மத்திய அரசுக்கு அப்போதே முழுமையாகத் தெரியுமா?
கவர்னரோ மத்திய அமைச்சர்களோ மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்கிற மாநில அமைச்சரின் பகிரங்க பேச்சுக்கு ஆளுநர் மாளிகையின் பதில் என்ன? மத்திய அமைச்சர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? சசிகலா கூட அக்டோபர் முதல் வாரத்துக்குப் பிறகு ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை என்று டி.டி.வி.தினகரன் சொல்கிற நிலையில், இடைத்தேர்தல் விண்ணப்பங்களில் அவருடைய கைரேகை பதிவானது எப்படி? அப்போது ஜெயலலிதா என்ன நிலையில் இருந்தார்?

விண்ணப்பத்தில் கைரேகை பதிவு செய்யும் அளவிலேயே உடல்நலன் பெற்றிருந்த ஜெயலலிதா, வாக்காளர்களுக்கு விடுத்த வேண்டுகோள் அறிக்கையில் கையெழுத்திட்டது எப்படி? முதலமைச்சரின் கையெழுத்தையே மோசடியாக போடக்கூடியவர்கள் அவரைச் சுற்றியும், அவரது அமைச்சரவையிலும், தலைமைச் செயலகத்திலும் இருந்தார்களா? அப்படியெனில் என்னென்ன திட்டங்களுக்கு கமிஷன் அடிப்படையில் மறைந்த முதலமைச்சரின் கையெழுத்து இதுவரை போடப்பட்டுள்ளது?
முதலமைச்சரின் இலாகாக்கள் அவரது ஒப்புதலுடன் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகையிலிருந்து அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டது. மயங்கிய நிலையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில், கடுமையான நோய்த்தொற்றுடன், கையெழுத்திட முடியாத நிலையில் இருந்த ஜெயலலிதா அம்மையார் எந்த முறையில் தன்னுடைய இலாகாக்களை மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்தார்? ஜெயலலிதாவின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நள்ளிரவு கடந்தநிலையில், இடைக்கால அமைச்சரவைக்குப் பதிலாக, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உடனடியாக முழுமையான அமைச்சரவை பதவியேற்றதற்கு காரணம் என்ன?

பதவி வேட்கைக்காகத்தான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் தொடர்வதாக 75 நாட்களும் தெரிவிக்கப்பட்டனவா? இந்தக் கேள்விகள் நம்முடைய தனிப்பட்ட கேள்விகள் அல்ல. தமிழ்நாட்டு மக்களும், ஜெய லலிதாவின் தலைமையை ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க தொண்டர்களும் கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கான விடையை, ஜெயலலிதாவின் கல்லறை மீது பதவி நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்களால் அரைகுறை மனதுடன் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷனால் முழுமையாக வெளிக்கொண்டு வரமுடியாது.

சி.பி.ஐ. போன்ற தன்னாட்சி அமைப்பின் மூலமான விசாரணையில் தான் பெருமளவு உண்மைகள் வெளிப்படும். அம்மா.. தாய்.. தெய்வம்.. என்றெல்லாம் ஜெயலலிதா பற்றி மேடைகளில் தொடங்கி சட்டமன்றம் வரை உதட்டளவில் உயர்வாகப் பேசிவிட்டு, செயல் முழுவதும் அவருக்கு துரோகம் இழைக்கும் வகையில், அவரது உடல்நிலையை சாதகமாக்கி, சிகிச்சை கால மர்மங்கள் வெளியே தெரியாதபடி, மரண அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலேயே கல்லறையில் புதைத்துவிட்டு, பதவி சுகம் அனுபவிக்கிற (அ)தர்ம யுத்தக்காரர்களை யும், குதிரைபேர ஆட்சியாளர் களையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அக் கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications