தலைமைச் செயலகத்தில் பன்னீர்செல்வத்தை சந்தித்த ஸ்டாலின்.. தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரிக்கை
திமுக செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று சந்தித்து விவசாயிகள் பிரச்சினை குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசித்தார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்த, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார்.
திமுக செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் சென்று கட்சி தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், விவசாயிகள் பிரச்சினை குறித்து பேச முதல்வர் பன்னீர் செல்வத்திடம் நேரம் கேட்டிருந்தேன். இன்று மாலை 5 மணிக்கு சந்திப்புக்கு நேரம் ஒதுக்கியுள்ளார் பன்னீர்செல்வம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், மாலை 5.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏக்களும் ஸ்டாலினுடன் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சிறப்பு சட்டசபையை கூட்டி, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கைவிடுத்தோம். ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் எனவும் முதல்வரிடம் கோரிக்கைவிடுத்தோம் என்றார்.
அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுங்கள், விவசாயிகள் பிரதிநிதிகளையும் அழைத்து பேசி வறட்சியை சமாளிக்க நடவடிக்கை எடுங்கள் எனவும், முதல்வரிடம் கோரிக்கைவிடுத்துள்ளோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக, காலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போட்டியை இவ்வாண்டு நடத்தியே தீருவோம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதை குறிப்பிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அதன்பிறகு தீர்மானிப்போம் என்று தெரிவித்திருந்தார்.
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறறகு தமிழக ஆட்சி சிறப்பாக நடக்கிறதா என்ற நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ஸ்டாலின், நீங்கள் என்ன நோக்கத்தில் கேட்கிறீர்கள் என தெரியும்.. அதற்கு நான் பலிகடா ஆக முடியாது என கூறிவிட்டார்.