முதன்முறையாக தேர்தலைச் சந்திக்கும் திருப்பூர் தொகுதி மருத்துவர்...
திருப்பூர்: திமுக சார்பில் திருப்பூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக 72 வயது மருத்துவர் எம்.செந்தில்நாதன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கோபி அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டியில் மல்லே கவுண்டர்-நஞ்சம்மாள் தம்பதிக்கு 1.8.1942-ம் ஆண்டு மகனாகப் பிறந்தவர் எம்.செந்தில்நாதன். கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தைச் சேர்ந்த இவர், பள்ளிப் படிப்பை புளியம்பட்டி பகுதியில் படித்து விட்டு, சென்னையில் மருத்துவப் படிப்பை முடித்துள்ளார்.

கோபி, திருப்பூர், சத்தி, டி.என். பாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிய செந்தில்நாதன், கடந்த 1992-ம் ஆண்டு கோபியில் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றியபோது விருப்ப ஒய்வு பெற்றார்.
தற்போது இவர் சொந்தமாக கோபியில் மருத்துவமனை துவங்கி, அதில் அறுவை சிகிச்சை மருத்துவராக உள்ளார். இதே மருத்துவமனையில் தான் இவரது மனைவி மகப்பேறு மருத்துவர் சுசீலா செந்தில்நாதன், மகன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் எஸ்.குமரேசன், மகள் லேப்ரோஸ்கோப் மருத்துவர் கவிதா கார்த்திகேயன், மருமகள் மகப்பேறு மருத்துவர் நந்திதா குமரேசன், மருமகன் குழந்தைகள் நல மருத்துவர் பி.கார்த்திகேயன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
சிறுவயது முதலே திமுக அனுதாபியாக வளர்ந்த செந்தில்நாதன் 1997-ம் ஆண்டு திமுகவில் உறுப்பினரானார். பல்வேறு கட்சிக் கூட்டங்களிலும், போராட்டத்திலும் இவரின் பங்கு அளப்பரியாதது.
தற்போது லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடக் கிடைத்த வாய்ப்பின் மூலம் இவர் முதன்முறையாக தேர்தலில் களம் இறங்குகிறார்.












Click it and Unblock the Notifications