மதனிடம் பெரும் பணம் பணத்தைக் கொடுத்துவிட்டுத் தவிக்கும் திரையுலக விஐபிக்கள்!
சென்னை: தலைமறைவாகிவிட்ட தயாரிப்பாளர் மதனிடம் பெரும் பணத்தைக் கொடுத்துவிட்டு தவிக்கிறார்கள் திரையுலக பெரும் புள்ளிகள்.
சில தினங்களுக்கு முன்பு கங்கையில் சமாதியாகப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனார் வேந்தர் மூவீஸ் மதன்.
அவர் காணாமல் போன செய்தி பரவிய அடுத்த நொடியிலிருந்து திரையுலகம் பரபரக்க ஆரம்பித்துவிட்டது. முக்கியமாக பல தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள், விநியோகஸ்தர்கள் பீதியடைந்துள்ளனர்.
காரணம், இவர்கள் பெரும் பணத்தை மதனிடம் கொடுத்துள்ளனர். இவர் ஒரு பிரபல தயாரிப்பாளர், அதுவும் பெரிய இடம் என்பதால் இவர் கேட்டபோதெல்லாம் மறுபேச்சு பேசாமல் பணத்தைக் கொடுத்துள்ளனர்.
அதேபோல இவர் தயாரித்து வரும் படங்களை நம்பியும் பெரும் பணத்தை விநியோகஸ்தர்கள் கொடுத்துள்ளனர். அனைத்தையும் எடுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார் மதன். கடிதத்தில் தன்னிடம் பணம் கொடுத்தவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். வேந்தர் மூவீஸ் கணக்கில் எல்லாம் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தாலும், அப்படி எதுவுமே இல்லை என்று வேந்தர் மூவீஸ் தரப்பில் சொல்கிறார்கள்.
இதனால் வெளியில் சொல்ல முடியாத வேதனையுடன் தவித்து வருகிறார்கள் திரையுலகினர்.