சசிகலா படத்தை போட்டு ஓட்டு கேட்டுதான் பாருங்களேன்...தினகரனுக்கு மதுசூதனன் சவால்
சசிகலாவின் படத்தை போட்டு கேட்டு பாருங்கள் என்று அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் சவால் விடுத்துள்ளார்.
சென்னை: சசிகலாவின் படத்தை வைத்து வாக்கு கேட்டால் ஒரு ஓட்டு கூட விழாது என்பது டிடிவி தினகரனுக்கே தெரியும் என்று அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக அம்மா , அதிமுக புரட்சித் தலைவி அம்மா, திமுக, தேமுதிக, பாஜக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
எனினும் அதிமுகவின் இரு அணிகளுக்கும், திமுகவுக்கும் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரட்டை இலை முடக்கப்பட்டதால் அதிமுகவின் இரு அணிகளும் தங்களது கட்சி சின்னத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சசிகலா படம் மிஸ்ஸிங்
இதனால் ஆர்.கே.நகரில் பிரசாரம் களைக்கட்டியுள்ளது. இந்நிலையில் தொப்பி சின்னத்தில் வாக்கு கேட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், துண்டு பிரசுரங்களில் எந்த ஒரு இடத்திலும் சசிகலாவின் புகைப்படம் இல்லை. ஆனால் ஜெயலலிதாவின் உருவப்படத்தை பெரிதாக பிரிண்ட் செய்து கீழே சிறு அளவில் தினகரன் போட்டோவை வெளியிட்டு தொப்பி சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது தினகரன் தரப்பு.
துணை பொதுச் செயலாளர் ஆக்கிய...
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்குள்பட்ட கொருக்குபேட்டை, ராதாகிருஷ்ணன் நகர் உள்ளிட்ட தொகுதிகளில் மதுசூதனன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சிறைக்கு செல்வதற்கு முன்னர் தினகரனை அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் ஆக்கியவர் சசிகலா.
ஒரு ஓட்டுகூட விழாது
அவரது புகைப்படத்தையே பிரசார விளம்பரங்களில் தினகரன் தரப்பு பயன்படுத்த வில்லை. சசிகலாவின் படத்தை போட்டால் தனக்கு ஒரு வாக்குக் கூட விழாது என்பது தினகரனுக்கே தெரியும்போல். தைரியம் இருந்தால் சசிகலாவின் புகைப்படத்தை போட்டு வாக்கு சேகரித்து பார்க்கட்டும்.
மக்கள் பாடம் புகட்டுவர்
சசிகலாவை முன்னிறுத்தினால் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதாலேயே அவரது படத்தை தவிர்த்து விட்டனர். அப்படியென்றால் ஏதோ மர்மம் இருக்கிறது என்றுதானே அர்த்தம். இதற்கு உரிய பாடத்தை மக்கள் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி புகட்டுவர் என்றார் மதுசூதனன்.