நெல்லையில் வேகமாகப் பரவும் "மெட்ராஸ் ஐ"
நெல்லை: சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் மெட்ராஜ் ஐ எனப்படும் கண் நோய் வேகமாகப் பரவி் வருகிறது.
சென்னையில் பரவி வந்த நிலையில் தற்போது இந்த மெட்ராஸ் தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும் பரவி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதை தொடர்ந்து பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மழை காரணாக மாற்றம்
இந்த மழையின் காரணமாக சீதோஷ்ண நிலை மாற்றம் அடைந்துள்ளது. இதன் காரணமாக காய்ச்சல் உள்ளிட்ட நோய்களின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதில் மெட்ராஜ் ஐ என்ற கண் தொற்று நோயாள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவந்த கண்கள்
கண்கள் சிவந்து தொடர்ந்து ஏற்படும் உறுத்தல் காரணமாக பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு வந்தால் அடுத்தவருக்கு வேகமாக பரவும் தன்மை கொண்ட இந்த நோயால் இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் வரும்
இதுகுறித்து கண் மருத்துவர்கள் கூறுகையில், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இதுபோன்ற கண் பாதிப்புகள் வருகின்றன. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கண்களில் இருந்து தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருக்கும்.
கண்ணைக் கசக்காதீங்க
இது போன்ற சமயங்களில் கண்களை நாம் கசக்க கூடாது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் கை கொடுக்கும் போதும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தும் போதும் இந்த நோயின் தாக்கம் அவர்களையும் தொற்றி கொள்கிறது.
கண்ணாடி போடுங்க
பாதிப்பு உள்ளவர்களின் கண்களை பார்ப்பதால் இந்த நோய் பரவாது. இந்த நோய் பாதிப்பு வந்தவர்கள் கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது.
கையால் கண்ணைத் துடைக்காதீர்கள்
இந்த நோயில் இருந்து தப்பிக்க முதலில் கைகளை நன்றாக கழுக வேண்டும். கண் உறுத்தல் இருந்தால் கைகளால் கசக்க கூடாது.
கர்ச்சீப்பைத் தொடாதீர்கள்
கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தி கர்சீப், பேனா உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்தி விட்டு நம் கண்களை கசக்கும்போது இந்த நோயின் தாக்கம் நமக்கும் வந்து விடும் என்றார் அவர்.