பல கோடி பணம் பறிமுதல்... கரூர் அன்புநாதனுக்கு முன்ஜாமீன் வழங்கியது சென்னை ஹைகோர்ட்!
மதுரை: கரூரில் கிட்டங்கியில் பல கோடி ரூபாய் பணத்தைப் பதுக்கி வைத்து விட்டு தப்பித் தலைமறைவாக இருக்கும் கரூரைப்சே சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
கரூர் அய்யம்பாளையத்தில் வசித்து வந்தவர் அன்புநாதன். இவரது பூர்வீகம் மதுரையாகும். நிதி நிறுவனம் நடத்தி வந்த இவர் சில அமைச்சர்களுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இவரது கிட்டங்கியிலிருந்து ஒரு ஆம்புலன்ஸ் அடிக்கடி வெளியே போய் வந்து கொண்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் தேர்தல் ஆணையத்திற்குப் புகார்கள் போனது.
இதையடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவின் பேரில் இந்த கிட்டங்கியில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் குதித்தனர். அப்போது அங்கு கோடிக் கணக்கில் பணம் சிக்கியதாக கூறப்பட்டது. கிட்டத்தட்ட ரூ. 5 கோடி அளவுக்கு பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. ரூ. 4.77 கோடி அளவுக்குப் பணம் சிக்கியதாக மாவட்ட நிர்வாகம் கூறியது.
இந்த ரெய்டைத் தொடர்ந்து அன்புநாதன் தலைமறைவாகி விட்டார். இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அன்புநாதன் மிக முக்கியமான காவல்துறை அதிகாரியின் பார்வையில் பத்திரமாக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதியே குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையை நாடினார் அன்புநாதன். அதை விசாரித்த நீதிபதி இன்று அன்புநாதனுக்கு தினசரி அய்யம்பாளையம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் அளித்தார்.