வக்கீல் வீடு தாக்கப்பட்ட வழக்கு: சசிகலா புஷ்பா முன்ஜாமின் மனு தள்ளுபடி
சசிகலா புஷ்பாவின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
மதுரை: நெல்லை மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த வக்கீல் சுகந்தி வீடு தாக்கப்பட்ட வழக்கில், ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா இவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதே வழக்கில் கைதான நாடார் அமைப்பை சேர்ந்த ஹரிநாடார், சந்திரகுமார் மற்றும் ராமலிங்கம் ஆகியோரும் தங்களுக்கு ஜாமீன் கோரி மனு செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி ஆஜராகி, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் அளித்தவர்களுக்காக வக்கீல் சுகந்தி வழக்கு நடத்துகிறார்.
புகாரை வாபஸ் பெற செய்யும் முயற்சியில் சசிகலா புஷ்பா தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு வக்கீல் சுகந்தி தடையாக இருப்பதாக கருதி அவரது வீட்டை தாக்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினாலும், சசிகலா புஷ்பா தரப்பினருக்கு முன்ஜாமீன் வழங்கினாலும் விசாரணை பாதிக்கும். எனவே, இந்த மனுக்களை அனுமதிக்க கூடாது என்றார்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், அரசியல் காரணங்களுக்காக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். வக்கீல் வீடு தாக்கப்பட்ட சம்பவமே போலீசாரால் ஏற்படுத்தப்பட்டது. எனவே, மனுக்களை அனுமதிக்க வேண்டும் என்றார். இதையடுத்து, வழக்கின் தன்மை, போலீசாரின் விசாரணை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த மனுக்களின் மீது உத்தரவிடுவதாக கூறிய நீதிபதி, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சசிகலா புஷ்பா முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகனுக்கு முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.சசிகலா புஷ்பாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் விரைவில் அவர் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலியல் துன்புறுத்தல் வழக்கு
சசிகலா புஷ்பா பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பணிப்பெண்கள் அளித்த புகாரில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சசிகலா புஷ்பா மற்றும அவரது குடும்பத்தினர் சார்பில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவும் கடந்த செப்டம்பர் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விரைவில் கைது
அதே நேரத்தில் முன்ஜாமின் மனுவில், அவரது கையெழுத்து தொடர்பாக எழுந்த சந்தேகம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்குகளில் ஏதாவது ஒரு வழக்கில் சசிகலா புஷ்பா கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.