புதிய தலைமை செயலக வழக்கு: கருணாநிதியை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை!
சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டிடம் தொடர்பான வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதிய விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த தி.மு.க. ஆட்சியின் போது சென்னை அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக கூறி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து புதிய தலைமை செயலக கட்டிடத்தில் ஆய்வு செய்த குழுவினர் பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதி 2014 செப்டம்பர் 18-ந்தேதி நேரில் ஆஜராக விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை எதிர்த்து கருணாநிதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது இந்த வழக்கில் ஆஜரான ரகுபதி தரப்பு வக்கீல், மனு விசாரணை முடியும் வரை, புதிய தலைமை செயலக வழக்கு தொடர்பான விசாரணையை நீதிபதி ரகுபதி ஆணையம் மேற்கொள்ளாது என்று உத்தரவாதம் அளித்தார். அதன் பிறகு இந்த மனு விசாரணைக்கு வரவில்லை.
இந்த நிலையில் விசாரணை கமிஷன் நீதிபதி ரகுபதி ஒரு உத்தரவு பிறப் பித்தார். அதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் மனு உள்ளது. அந்த மனு மீதான விசாரணை காலதாமதம் ஆவதால் புதிய தலைமை செயலகம் கட்டிடம் தொடர்பான விசாரணையை நிறுத்தி வைக்க முடியாது. அதனால் இந்த விசாரணையை மீண்டும் தொடங்குகிறேன். இதில் வழக்கில் சம்பந்தப்பட்டவரும் (கருணாநிதி) நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறி இருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் உயர்நீதிமன்றத்தில் கொடுத்த உத்தரவாதத்தை நீதிபதி ரகுபதி கமிஷன் மீறி உள்ளது. எனவே நீதிபதி ரகுபதி கடந்த 25-ந்தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கருணாநிதியை விசாரிக்க நீதிபதி தடை விதித்தார். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 13-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications