முகாந்திரம் இருந்தால் விஜயேந்திரர் மீது வழக்கு பதியலாம்... ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை : தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாத விஜயேந்திரர் மீது தொடரப்பட்ட மனு மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த மாதத்தில் நடைபெற்ற தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவில் காஞ்சி சங்கர மடத்தின் இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கலந்து கொண்டார். தேசிய கீதப் பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தியவர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு சங்கர மடம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் போது தியானம் செய்வது எங்களின் வழக்கம் என்று மழுப்பல் பதிலும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த துரைசாமி என்பவர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் மீது வழக்கு பதிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த மனு கடந்த வாரத்தில் விசாரணைக்கு வந்த போது இது குறித்து பதில் அளிக்குமாறு போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை விஜயேந்திரர் அவமதித்ததாக கூறப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தால் அவர் மீது வழக்கு பதியலாம் என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications