நடிகை ராணி பத்மினி கொலையாளி 18 ஆண்டு சிறைவாசத்துக்கு பின் விடுதலை- ஹைகோர்ட் உத்தரவு
சென்னையில் 31 ஆண்டுகளுக்கு முன் நடிகை ராணி பத்மினி கொல்லப்பட்ட வழக்கின் கொலையாளியை 18 ஆண்டு சிறைவாசத்துக்கு பின் விடுவிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது.
சென்னை: நடிகை ராணி பத்மினி மற்றும் அவரது தாயார் இந்திரகுமாரியை கொலை செய்த வழக்கில் 18 ஆண்டுகாலம் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கொலையாளி லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வில்லியனூர் மாதா, நிரபராதி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் ராணி பத்மினி. மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் ராணி பத்மினி நடித்திருந்தார்.

சென்னை அண்ணா நகரில் தாய் இந்திராகுமாரியுடன் வசித்து வந்தார் நடிகை ராணி பத்மினி. இவரும் 1986-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ராணி பத்மினி வீட்டின் காவலாளி லட்சுமி நரட்சிம்மன், கார் ஓட்டுநர் ஜெபராஜ், சமையல்காரர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த மூவருக்கும் 1989-ம் ஆண்டு செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இத்தண்டனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மூவரும் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓட்டுநர் ஜெபராஜூக்கு விதித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. அத்துடன் லட்சுமி நரசிம்மன், கணேசன் இருவரையும் விடுதலை செய்தும் உத்தரவிட்டது.
இவ்வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த விசாரணையின் முடிவில் ஜெபராஜ், லட்சுமி நரசிம்மன், கணேசன் மூவருக்குமே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் லட்சுமி நரசிம்மன், கணேசன் இருவரும் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர்.
இதனிடையே 2008-ம் ஆண்டு 1405 கைதிகள் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுவிக்கப்பட்டனர். 7 ஆண்டு சிறைதண்டனை அனுபவித்தோரும் விடுவிக்கப்பட்டனர். அப்போது லட்சுமி நரசிம்மனை விடுவிக்க கோரி அவரது மனைவி மேரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான விசாரணையின் முடிவில் இன்று 18 ஆண்டுகால சிறைவாசம் அனுபவித்து வரும் லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications