கபாலி படத்துக்கு வெளிநாட்டில் ஏ சர்டிபிகேட்- தமிழகத்தில் மட்டும் யு சான்றிதழா?: நீதிபதி கிருபாகரன்
கபாலி படத்துக்கு யு சான்றிதழ் அளித்தது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்துக்கு வெளிநாடுகளில் ஏ சான்றிதழ் கொடுத்துவிட்டு தமிழகத்தில் மட்டும் யு சான்றிதழ் கொடுத்தது ஏன் என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சவாரி திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்தது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியதாவது:
ஏன் யு சான்றிதழ்
ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்துக்கு வெளிநாடுகளில் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் யு சான்றிதழ் கொடுத்தது ஏன் என்பதை சினிமா தணிக்கைக் குழு விளக்க வேண்டும்.
மோசடி செயல்
தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பது மிகப் பெரிய மோசடியாக உள்ளது. இது ஒரு ஏமாற்று வேலையாக இருக்கிறது.
சட்ட ரீதியான மோசடி
தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை என்பது சட்டரீதியான மோசடியாகவே இருக்கிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் இதுவரை வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களின் விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
கபாலி
ஏற்கனவே கபாலி திரைப்படம் வெளியான போது இணையத்தில் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட தடை கோரிய வழக்கில், கபாலி திரைப்படத்தின் வசூலில் ஒரு பகுதியை சமூக சேவைக்கு ஒதுக்க வேண்டும் என கூறியிருந்தார் நீதிபதி கிருபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.