கட்டாய ஹெல்மெட்.. அடுத்து பொதுமக்கள் வாகனங்களுக்கு வருகிறது "ஸ்பீடு கவர்னர்"? உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை : அதிகரித்து வரும் விபத்துக்களைத் தவிர்க்க பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை ஏன் பொருத்தக்கூடாது? என மத்திய அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது குறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேகக்கட்டுப்பாட்டு கருவியை பொருத்துவது குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும், எந்த வாகனங்களுக்கு கருவி பொருத்தலாம் என மாநில அரசுகள் கண்டறிய வேண்டும் எனவும் கூறினார்.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எந்த வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தலாம் என்பதை ஆய்வு செய்து வருவதாகவும், புதிய வாகனங்களுக்கும் கருவி பொருத்துவது பற்றி வரும் 28 ஆம் தேதி பதிலளிப்பதாகவும், தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதி, பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களின் வேகத்தின் அளவை நிர்ணயிக்க வேண்டும். வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தாததால்தான் அதிக உயிரிப்புகள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி ஏன் பொருத்தக்கூடாது?'' என கேள்வி எழுப்பினார்.
தற்போது பள்ளி வாகனங்களில் மட்டும் "ஸ்பீடு கவர்னர்" எனப்படும் வேகக் கட்டுப்பட்டுக் கருவி பொருத்த சட்டம் உள்ளது. இதனால் அந்த வாகனங்கள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications