திருப்பத்தூர்: பட்டியலின பெண் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!
திருப்பத்தூர்: நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலினப் பெண் தேர்வு செய்யப்பட்டதையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சிவகுமாரும், முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வராஜும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

அவர்கள் தங்கள் மனுவில், மலை கிராமமான நாயக்கனேரியில் 9 வார்டுகளில் 3,440 வாக்காளர்கள் உள்ளதாகவும், கிராமத்தின் மக்கள் தொகையில் 66 சதவீதம் பழங்குடியினரும், மீதமுள்ள 34 சதவீதம் பிற்படுத்தப்பட்டோரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோரும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
பட்டியலினத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கூட தங்கள் கிராமத்தில் இல்லாத நிலையில், ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட பஞ்சாயத்தில் பட்டியலினத்தவரோ, பழங்குடியினரோ, பெண்களோ ஒட்டுமொத்த மக்கள்தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அதிகமாக இருந்தால் தான் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்ற விதி உள்ள நிலையில், அது பின்பற்றப்படவில்லை எனவும் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலினப் பெண்ணுக்கு ஒதுக்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தும், ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலினப் பெண் தேர்வு செய்யப்பட்டதையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை பொதுப் பிரிவை சேர்ந்த பெண் அல்லது பழங்குடியின பிரிவு பெண்ணுக்கு நான்கு வாரங்களில் ஒதுக்க உத்தரவிட்ட நீதிபதி, அவ்வாறு ஒதுக்கப்பட்ட பின் தேர்தல் நடத்தி புதிய ஊராட்சி தலைவரை தேர்ந்தெடுக்கவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications