எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கத் தடை-தமிழக அரசு மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பதால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடையை நீக்கக் கோரிய தமிழக அரசின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல தடை கோரி மாற்றம் இந்தியா அமைப்பை சேர்ந்த நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்ரமணியன் அடங்கிய அமர்வு பொது நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல தடை விதித்தனர். இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து நேற்று ஒரு மணி நேரத்தில் தமிழக அரசு இதற்கான பதில் மனுவை தாக்கல் செய்ததோடு, மாணவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் அரசு கோரிக்கை விடுத்தது. இந்த வழக்கு சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் முதல்வர் எந்த பேச்சுகளையும் பேச வில்லையே என்று கருத்து தெரிவித்தனர்.

அரசின் பெருமை பேசும் நிகழ்ச்சி
மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசாமல் அரசின் பெருமையை பேசும் நிகழ்ச்சியாகத் தான் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இருக்கிறது. மாணவர்களின் சிரமங்களைப் பற்றி அரசு கவலை கொள்ளவில்லை. பிரிட்டன் இளவரசி, பிரதமர் என யார் வந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்து செல்ல அதிகாரம் இல்லை என்றும் கூறினர்.

சிபிஎஸ்இ மாணவர்கள் ஏன் இல்லை
இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பில் எம்ஜிஆர் குறித்து மாணவர்களிடையே புரிதலை ஏற்படுத்தவே அவர்கள் நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லப்படுவதாகவும், இது அவர்களுக்கு பயனுள்ளதாகவுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர் கேள்வி கேட்ட நீதிபதிகள் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில் ஏன் சிபிஎஸ்இ மாணவர்களை இந்த நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்லவில்லை என்று கிடுக்குப்பிடி கேள்வி கேட்டுள்ளனர்.

பள்ளியிலேயே செய்யலாமே
மேலும் 2 மணி நேரம் மாணவர்களால் ஒரு நிகழ்ச்சியை கவனிக்க முடியாது, நான் பள்ளி மாணவனாக இருந்த போது இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு எதற்காக அழைத்து செல்வார்கள் என்று எனக்கு தெரியும். அப்படி உண்மையிலேயே மாணவர்களுக்கு நலன் பயக்கும் விஷயமாக இருந்தால் ஏன் பள்ளிகளிலேயே விடுமுறை நாட்களின் போது அவற்றை அவர்களுக்கு போட்டு காண்பிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

தடை நீட்டிப்பு
இந்நிலையில் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பதாகக் கூறினர். நூற்றாண்டு விழாவின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசு பெறும் மாணவர்கள் பங்கேற்க தடையில்லை என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தடையை நீக்கக் கோரிய தமிழக அரசின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.












Click it and Unblock the Notifications