நித்தியானந்தாவைக் கைது செய்ய உத்தரவிட நேரிடும்... ஹைகோர்ட் எச்சரிக்கை!
மதுரை ஆதீன மடாதிபதி விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யாத நித்தியானந்தா பிப்ரவரி 2ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிடில் கைது செய்ய உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது
Recommended Video

சென்னை : மதுரை ஆதீன மடாதிபதியாக நித்தியானந்தா பொறுப்பேற்றது தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத நித்யானந்தாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீதிமன்றத்தை மதிக்காமல் இருப்பதற்கு நித்தியானந்தாவிற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி பிப்ரவரி 2ம் தேதிக்குள் பதில் தாக்கல் செய்யாவிட்டால் கைது உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்த போது 293வது மடாதிபதியாக நித்தியானந்தாவை அறிவித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. நித்தியானந்தாவை ஆதீனமாக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையைச் சேர்ந்த ஜெகதலப் பிரதாபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கு தொடர்ந்தார். சட்ட விரோதமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதாக ஜெகதலப்பிரதாபன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு நித்தியானந்தா தான் தான் 293வது ஆதீனம் என்று பதில் மனு தாக்கல் செய்தார். இதற்கு நீதிபதி மகாதேவன், 292வது ஆதீனம் உயிருடன் இருக்கும் போது நீங்கள் புதிய ஆதீனமாக பொறுப்பேற்பது தவறு பதில் மனுவில் திருத்தம் செய்து தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீது பல முறை வாய்தா கொடுக்கப்பட்ட போதும் நித்தியானந்தா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தா தரப்பு பதில் மனு தாக்கல் செய்யாததற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். நீதிமன்றத்தை மதிக்காமல் இருக்கும் நித்தியானந்தாவை இன்றே கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிடப்படும் என்றார்.
இதனையடுத்து நித்தியானந்தா தரப்பு வக்கீல் நீதிபதியிடம் அவகாசம் கேட்டதையடுத்து பிப்ரவரி 2ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிடில் கைது உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்து வழக்கு விசாரணையை நாளை மறுதினத்திற்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications